Suriya: "எனக்கு இவ்வளவு அன்பைத் தருகிறீர்கள்; யாரு சாமி நீங்களெல்லாம்?" - மும்பை...
இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானிலுள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியர்களைத் திருமணம் செய்து பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் நாட்டினரும் தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்து தாயகம் திரும்பும் சூழலிலுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கருணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:
‘இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் மத்திய அரசின் திட்டம், மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களைத் திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வரும் ஏராளமான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் மக்களை நாடு கடத்துவது அவர்களது குடும்பத்தில் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை உருவாக்கக் கூடும். எனவே, அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முன்னாள் கிளர்ச்சியாளர்களைத் திருமணம் செய்து கொண்ட ஏராளமான பாகிஸ்தான் பெண்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல்வர் ஒமர் அப்துல்லா கொண்டு வந்த திட்டத்தின் மூலம் ஜம்மு - காஷ்மீரில் குடியேறியுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் ஆகியப் பகுதிகளுக்குச் சென்று தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோர் சரணடைந்து மறுவாழ்வு பெறும் வகையிலான திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!