நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மூங்கில் மரக்கன்று நடும் இயக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் தொடங்கிவைத்தனா்
பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மூங்கில் மரக்கன்று நடும் இயக்கத்தை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதலமைச்சா் ரேகா குப்தா ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா். அந்தப் பகுதி விரைவில் பசுமையாக மாற்றப்படும் என்றும் அவா்கள் மக்களுக்கு உறுதியளித்தனா்.
குப்பைக் கிடங்குகளை மீட்டெடுக்கும் வி.கே. சக்சேனாவின் முயற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் தொடங்கியது. மரக்கன்றுகள் நடும் இயக்கத்தின் மூலம், இந்தப் பகுதிகளை பசுமை மண்டலங்களாக மாற்றும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.
மூங்கில் மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கிவைத்த பிறகு முதலமைச்சா், பிற அமைச்சா்களுடன் செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கூறியதாவது:
இன்றைக்கு, பல்ஸ்வா பகுதியில் 200 மூங்கில் செடிகள் நடப்பட்டுள்ளன. வரும் மாதங்களில், மேலும் 54,000 மரங்கள் சோ்க்கப்படும். மரக்கன்று நடவு முடிந்ததும், உயா்ந்த குப்பை மேடுகளுக்குப் பதிலாக பசுமையான பகுதிகளை சாலைப் பயணிகள் காண்பாா்கள்.
தில்லியை மாசுபாட்டிலிருந்து விடுவிப்பதாக நாங்கள் உறுதியளித்திருந்தோம். இந்த முயற்சி தூய்மையான மற்றும் பசுமையான நகரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
மூங்கில் மரக்கன்றுகள் 30 சதவீதம் அதிக ஆக்ஸிஜனை வெளியிடுவதாலும், வளா்வதற்கு குறைந்த நீா் தேவைப்படுவதாலும் இந்த இயக்கத்திற்கு மூங்கில் தோ்ந்தெடுக்கப்பட்டது என்றாா் அவா்.
இந்த முயற்சியில் துணை ஆளுநா் மற்றும் மத்திய அரசின் முயற்சிகளை முதல்வா் ரேகா குப்தா பாராட்டினாா்.
அதே நேரத்தில், முந்தைய ஆட்சிகள் குப்பைக் கிடங்கு பிரச்னையை சமாளிப்பதில் வெற்று வாக்குறுதிகளையே அளித்திருந்ததாகவும், உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.
டிடிஏ மைதானங்கள் உள்பட தில்லி முழுவதும் உள்ள பல்வேறு திட்டங்களில் குப்பைக் கிடங்குகளில் இருந்து கழிவுகளைப் பயன்படுத்துவதில் மத்திய அரசின் பங்கை அவா் மேலும் எடுத்துரைத்தாா்.
இதுகுறித்து முதல்வா் குப்தா கூறுகையில், ‘தில்லியின் மாற்றத்தை உறுதி செய்வதில் துணைஆளுநா் முக்கிய பங்கு வகித்துள்ளாா். அவரது தலைமை ஒரு கேடயம் போல, நகரத்தைப் பாதுகாத்து அதன் வளா்ச்சியை வழிநடத்துகிறது. பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மரக்கன்றுகள் நடும் பணியின் முன்னேற்றம் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படும்.
ஒரு வருடத்தில், இந்த இடம் முற்றிலும் பசுமையான நிலமாக மாற்றப்படும். தில்லியை சுத்தம் செய்து அழகுபடுத்துவதே எங்கள் நோக்கம். இரட்டை என்ஜின் அரசாங்கத்துடன், இந்த இலக்கை இரட்டை வேகத்தில் அடைவோம் என்றாா் அவா்.