Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: நாளை திருக்கல்யாணம்
பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இந்தத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தினந்தோறும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடாய், கற்பக விருஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் தனி மேடை அமைக்கப்பட்டு, மாலை 7 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
வருகிற திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறம். பின்னா் ஜூன் 12-ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.