பாக்கெட்டிலேயே உளவாளி! ஸ்மார்ட்ஃபோன் உங்களை கண்காணிக்கிறதா?
ஒருவர் கையில் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால், அது கிட்டத்தட்ட பாக்கெட்டிலேயே உளவாளியை வைத்துக்கொண்டிருப்பதற்கு சமம் என்கிறது சைபர் நிபுணர்களின் கூற்று.
ஒருவர் செல்போனில் சார்ஜ் முழுமையாக ஏற்றிவிட்ட சில நிமிடங்களில், அல்லது சற்று நேரம் கழித்து, அதில் திடீரென 20 சதவீத சார்ஜ் குறைந்திருந்தால், உங்கள் போனை நீங்கள் பயன்படுத்தாத போதிலும் அது சூடேறிக் கொண்டிருக்கிறது.
இதைப் பார்த்ததும், நீங்கள் இதை ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று அலட்சியம் செய்யலாம். ஆனால் சைபர் பாதுகாப்பு நிபுணர்களோ, இவை நமது ஸ்மார்ட்போன்களுக்குள் இருக்கும் மிகவும் மோசமான ஒன்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் - அது உளவு மென்பொருள் அல்லது ஸ்பைவேர் போன்று.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், ஸ்மார்ட்ஃபோன் என்பது ஒருவரது தனிப்பட்ட உடைமையாகிவிட்டது. அந்த செல்ஃபோனில், தனிப்பட்ட உரையாடல்கள், நிதி நிலைமை, அலுவலக மின்னஞ்சல், நீங்கள் எங்கெல்லாம் சென்றுவந்தீர்கள் என்ற லோகேஷன் வரலாறும் பதிவாகியிருக்கும். ஒருவேளை, அந்த தகவல்களை ரகசியமாக யாரேனும் கண்காணித்தால்?
பாக்கெட்டில் வைத்திருக்கும் உளவாளி
ஸ்பைவேர் என்பது, ஒருவரது செல்போன் மூலம், அவரை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மோசமான மென்பொருள். இதைக் கொண்டு, செல்போனில் டைப் செய்வதை, அவர் எங்கெல்லாம் செல்கிறார், போன் அழைப்புகளில் பேசுவதை பதிவு செய்வது அல்லது செல்போனில் இருக்கும் மைக்ரோஃபோனை இயக்குவது, ஒருவருக்குத் தெரியாமலேயே அவரது செல்போனில் இருக்கும் கேமராவை இயக்குவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.