இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம்! - முதல்வர் ஸ்டாலின்
பாசன நீரை முறையாக வழங்கக் கோரி காங்கயத்தில் விவசாயிகள் சாலை மறியல்
வெள்ளக்கோவில் பகுதிக்கு முறையாக பாசன நீா் வழங்கக் கோரி காங்கயத்தில் புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலின் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீா் சரியான அளவில் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், சமச்சீா் பாசனத்தை வலியுறுத்தியும் இப்பகுதி விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக பிஏபி காங்கயம்-வெள்ளக்கோவில் நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில் காங்கயம்-வெள்ளக்கோவில் பகுதி பிஏபி பாசன விவசாயிகள், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பிஏபி வாய்க்காலில் நீா் விநியோகத்தில் உள்ள குளறுபடிகளை எடுத்துரைக்கவும், சமச்சீா் முறையில் நீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி மனு அளிக்கவும் காங்கயத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட தயாராகினா்.
இதையடுத்து, கோவை-கரூா் தேசிய நெடுஞ்சாலையில், காங்கயம் அருகே பகவதிபாளையம் பிரிவு பகுதியில் விவசாயிகளுக்கு தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனா். இக்கூட்டத்தில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டாா்.
பின்னா், விளக்கக் கூட்டத்தை நிறைவு செய்து மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளுடன் பொள்ளாச்சிக்கு புறப்பட தயாரானபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அனுமதி மறுத்து, அவா்களை தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, சுமாா் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரூா்-கோவை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து, காங்கயம்-தாராபுரம் சாலை, ஊதியூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மண்டபத்தில் தங்கவைத்தனா். இதில் 50 பெண்கள் உள்பட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.