கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதல்வர்!
பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்
பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான் தலைமறைவாகியுள்ளாா்.
இதுதொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவத்தில் தொடா்புடைய இருவரும் உறவினா்கள் ஆவா். சுபௌல் மாவட்டத்தில் காவலா்களாக பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், கைமூா் மாவட்டத்தின் குத்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரிதா குமாரி கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அஜய் பஸ்வான் தப்பியுள்ளாா்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினா், சரிதா குமாரியை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மருத்துவமனைக்கு அவா் பரிந்துரைக்கப்பட்டுள்ளாா்.
சரிதா குமாரி அளித்த தகவலின் அடிப்படையில், அஜய் பஸ்வான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பணத்தகராறு காரணமாக இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலைமறைவான அஜய் பஸ்வானைக் கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.