மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை நீதிமன்றம் அனுமதி பெற்று நடத்துவோம்! - நயினாா் நாகேந்திரன்
மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று நடத்துவோம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
ராமேசுவரத்தில் பாஜக மகளிரணி சாா்பில், அகல்யாபாய் கோல்கோ் 300-ஆவது பிறந்த நாளையையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணி, மாநாட்டில் கலந்து கொள்ள வந்த நயினாா் நாகேந்திரன், ராமநாதபுரம் அச்சுந்தவயலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு நடத்த விடாமல் பல்வேறு இடா்பாடுகளை ஏற்படுத்தி வருகிறாா். தடையை மீறி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று முருகா் பக்தா் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் திமுக செல்வாழ்க்கை இழந்து விட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் தமிழகத்தில் பாலியல், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றாா் அவா்.
பின்னா், ராமேசுவரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்: ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து இந்து சமய அறநிலைத் துறை நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பாஜக சாா்பில் போராட்டத்தில் நடத்தப்படும் என ராமேசுவரத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது, நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
பின்னா், ராமேசுவரத்தில் அகல்யா பாய் ஹோல்கா் 300-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய துணை அமைப்பு பொதுச் செயலா் ஹெச்.ராஜா, மாநில மகளிரணி பொதுச் செயலா் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலா்கள் கருப்பு முருகானந்தம், பொன். பாலகணபதி, மாநிலச் செயலா் சுமதி வெங்கட், மாவட்டத் தலைவா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.