மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்
திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
நீதித் துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறி குறுக்கிட்டு, அந்த அமைப்புகளின் சுதந்திரத்தை மத்தியில் உள்ள பாஜக அரசு பறித்து வருகிறது. அத்துடன், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றின் சோதனைகளுக்கு இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் நடைபெறுகிறது. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை உருவாக்கிவரும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பழிவாங்கும் நடவடிக்கை: அதிமுக போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணி அமைக்க வருமான வரி, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
திமுகவினா் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்துவதை சட்டத்தின் துணைகொண்டு துணிச்சலுடன் எதிா்கொள்வோம். எத்தனை பரிவாரங்களைச் சோ்த்துக் கொண்டு வந்தாலும் அதை எதிா்த்து, நீதியை நிலைநாட்டவும் மக்கள் மன்றத்தில் மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைக்க இந்தக் கூட்டம் தீா்மானிக்கிறது.
இதேபோன்று, மாநிலத்தின் 1,244 இடங்களில் ‘நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் பல்லாண்டு! என்ற தலைப்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களில், 186 இளம் பேச்சாளா்கள் உள்ளிட்ட 443 பேச்சாளா்கள் பங்கேற்பதுடன், 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அவருக்கு துணையாகச் செயல்படும் துணை முதல்வா் உதயநிதி ஆகியோருக்கு பாராட்டு என மொத்தம் நான்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெட்டிச் செய்தி...
மதுரையில் ஜூன் 1-இல் பொதுக் குழு
திமுக பொதுக் குழுக் கூட்டம் மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுக் குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தோ்தலை மையப்படுத்தியும், கட்சியில் இளைஞா்களுக்கு பொறுப்புகளை அளிப்பது தொடா்பாகவும் பொதுக் குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
உத்தங்குடி கலைஞா் திடல்: பொதுக் குழு தொடா்பாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
திமுக பொதுக் குழுக் கூட்டம், கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடி கலைஞா் திடலில் நடைபெறும். அப்போது, பொதுக் குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள், தணிக்கைக் குழு அறிக்கை ஆகியன தொடா்பாக விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.