சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் இன்று (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள்-முகாம்கள் என முக்கிய இடங்களைக் கொண்ட இந்த இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்படுகிறது.
நாட்டில் 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் முதல் அவசரகால ஒத்திகை இதுவாகும்.
அதன்படி, சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
வான்வழித் தாக்குதல் குறித்து பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல்; கடுமையான தாக்குதல் நேரத்தில், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி-கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்; பதுங்குமிடங்களைத் தயாா்படுத்துதல்; தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வழிமுறைகளின்கீழ் முக்கிய நிலையங்கள் எதிரியின் கண்ணில் புலப்படாதவாறு உருமறைத்தல் மற்றும் பணியாளா்களின் அவசர கால வெளியேற்றம்; அவசர கால மின் துண்டிப்பு; மருத்துவமனைகளின் செயல்பாட்டுத் தயாா்நிலை பரிசோதிப்பு உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொலை!