முதல்வராகிறாரா சிவக்குமார்? கர்நாடக அமைச்சர், எம்எல்ஏக்கள் பேச்சால் சர்ச்சை!
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கர்நாடக காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் அமைச்சரின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற போதே, சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோரில் யார் முதல்வர் என்ற கேள்வி நிலவியது.
தலைமையின் பேச்சுவார்த்தையை சிவக்குமார் ஏற்றுக்கொண்ட நிலையில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், முடா வழக்கில் சித்தராமையாவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்ததால், அடுத்த முதல்வர் சிவக்குமார் என்ற பேச்சு மீண்டும் எழுந்தது.
இதனிடையே, கர்நாடகத்தின் முதல்வராக வருகின்ற டிசம்பருக்குள் சிவக்குமார் பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி சிவகங்கா ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : 78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் சிறிது நேரத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி வெளியிட்ட கருத்துகள் கர்நாடக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
”டி.கே. சிவக்குமார் நல்ல தலைமையை வழங்கியுள்ளார், கட்சியைக் கட்டமைத்துள்ளார். அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது, அது காலத்தின் கட்டாயம். முதல்வர் பதவி என்பது பரிசாக வழங்கப்படுவது அல்ல, அவரின் கடின உழைப்புக்கு கிடைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மற்றும் பேரவை உறுப்பினரின் கருத்துகளால் கர்நாடக காங்கிரஸுக்குள் சித்தராமையா மற்றும் சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கு இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்தியுள்ளது.