நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி
மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
ஏற்கெனவே இப்போதைப்பொருளை தயாரித்த தொழிற்சாலைகள் புனே, மும்பை, சோலாப்பூர் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
சமீபத்தில் இம்மாத தொடக்கத்தில் மும்பை திலக் நகர் பகுதியில் எம்.டி. போதைப்பொருளுடன் மொஹ்சின் சையத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இக்பால் ஷேக் மற்றும் மெஹ்தாப் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சோஹைல் கான் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காட்கோபர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பை அருகில் உள்ள நாலாசோபாராவில் இருக்கும் பெல்ஹார் என்ற இடத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சித்திக் என்பவர்தான் மேற்கண்டவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்தார். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோதுதான் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை இருக்கும் இடம் தெரிய வந்தது.
உடனே அந்த இடத்தில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அங்கு 6 கிலோ எம்.டி. போதைப்பொருள் மற்றும் அது தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.13 கோடியாகும்.

1400 சதுர அடியில் பெரிய அளவில் போதைப்பொருளை தயாரிக்கும் வகையில் இயந்திரங்களை பொருத்தி இருந்தனர். ஒவ்வொரு மாதமும் 50 கிலோ போதைப்பொருள் தயாரித்து மும்பை முழுவதும் பி.எம்.டபிள்யூ. கார்களில் எடுத்துசென்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் நிலையம் இருந்தது. ஆனாலும் போலீஸாரால் அந்த போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சீனியர் அதிகாரி ஜிதேந்திரா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அத்தொழிற்சாலை இருந்த இடத்தின் உரிமையாளருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.





















