பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்
ராசிபுரம் அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர் பலி!
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து புதன்கிழமை பலியானார்.
ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டரான இவரது மகன் கவின்ராஜ் (வயது 14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் எஸ். சுகவனம், வட்டாட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
பின்னர், மாணவரின் சடத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித் துறையினர் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு சென்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதாவது பிரச்னை இருந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.