தங்கம் இறக்குமதியில் சரிவு!
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 103 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 15 டன் அளவில் மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்தாண்டைவிட நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 85 சதவிகித அளவில் குறையும்.
பல்வேறு சர்வதேச பொருளாதார அரசியல் சூழல்கள் காரணமாக, தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால், அதன் விலை உச்சத்திலேயே இருக்கிறது. இதனால், வங்கிகளும் வியாபாரிகளும் மிகக் குறைந்த அளவு தங்கத்தையே இறக்குமதி செய்து உள்ளனர்.
இதையும் படிக்க:கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!
கடந்த 10 ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி, சராசரியாக 76.5 டன்களாக பதிவாகியிருந்தது. தங்கம் இறக்குமதி குறைந்தால், அதற்கான செலவினமும் குறைந்து, அந்நிய செலாவணி வெளியேறுவது குறையும்; இதனால் ரூபாயின் மதிப்பு நிலையானதாக இருக்கும். இது பொருளாதாரத்தை மிகவும் நிலையானதாகவும், வெளிப்புற கடன்களை குறைவாக சார்ந்திருக்கவும் செய்யும்.
உலகின் இரண்டாவது பெரிய தங்கச் சந்தையாக இந்தியா இருப்பதால், இந்தக் குறைவு பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.