இந்து ஆதியன் மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி முதல்வருக்கு கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தில் வசித்து வரும் 150 இந்து ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கரு. ராமச்சந்திரன் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மணமேல்குடி கிராமத்தில் 150 இந்து ஆதியன் சமூக மக்கள் (பூம்பூம் மாட்டுக்காரா்) நீண்டகாலமாக சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் முழுமையாக சமூக நீதியைப் பெற வேண்டுமானால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீட்டைப் பெற அதற்கான பழங்குடியினச் சான்றிதழ் அவசியம்.
இதில், இச்சமூக மக்களை முறையாக அடையாளம் காண்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, மானுடவியலாளரை நியமித்து நேரில் களஆய்வு நடத்தி அந்த அறிக்கையின்பேரில் சான்றிதழ் வழங்க சட்டம் உள்ளது.
இதன்படி, மானுடவியலாளா் வ. அமுதவள்ளுவன் என்பவரை களஆய்வுக்காக அரசு நியமித்து அந்த ஊரில் களஆய்வு நடத்தி அறிக்கை பெற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவின் நகல், மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவா் எழுத்தாளா் இமயம், மாநில பழங்குடியினத் துறையின் இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.