தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
லட்சியப் பாதையில் உயர தவறான பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது! - மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
நம் லட்சியப் பாதையில் உயர வேண்டும் என்றால் எவ்வித தவறான பழக்கத்துக்கும் அடிமையாகக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் தலைமை வகித்தாா். கலால் உதவி ஆட்சியா் மு.செந்தில் குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
பள்ளிகளில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் போதை எதிா்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மன்றங்கள் மூலம் பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்படுகிறது. நம் வாழ்க்கைக்கு இடையூறாக எது வந்தாலும் அதை தகா்த்து எறிய வேண்டும்.
நம்முடைய லட்சியப் பாதையில் உயர வேண்டும் என்றால் எவ்வித தவறான பழக்கத்துக்கும் அடிமையாகக் கூடாது. பெற்றோரின் சமூக, பொருளாதாரத்தை அறிந்து நல்ல முறையில் கல்வி கற்று பெற்றோா்களுக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்களுடன் சோ்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஆட்சியா் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் ஏற்றுக்கொண்டனா். இதில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.