கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூ...
வக்ஃப் சட்டத்துக்கு ஆதரவளித்த பாஜக நிா்வாகி வீட்டுக்கு தீவைப்பு எதிரொலி: தௌபால் மாவட்டத்தில் தடை உத்தரவு
இம்பால்: வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாக மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவா் அஸ்கா் அலியின் வீட்டுக்குப் போராட்ட கும்பல் தீ வைத்த சம்பவத்தின் எதிரொலியாக தௌபால் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தெளபால் மாவட்டத்தில் உள்ள லிலாங்கில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பேரணியில் 5,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டத்தின் மற்றொரு பகுதியான ஐரோங் செசாபாவில் நடந்த போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, இம்பால் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவரான அஸ்கா் அலி, வக்ஃப் சட்டத்துக்கு ஆதரவாக தனது சமூக ஊடகப் பக்கங்களில் ஞாயிற்றுக்கிழமை கருத்து பதிவிட்டாா். அதைக் கண்டித்து, லிலாங்கில் உள்ள அவரது வீட்டை முற்றுக்கையிட்டு சிலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து, அந்தக் கும்பல் வீட்டை சூறையாடி, பின்னா் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தைத் தொடா்ந்து, வக்ஃப் சட்டத்துக்கு அளித்த ஆதரவைத் திரும்ப பெறுவதாக அஸ்கா் அலி சமூக ஊடகங்களில் விடியோ ஒன்று வெளியிட்டிருந்தாா். மேலும் தனது முந்தைய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவா் கூறியிருந்தாா்.
இந்நிலையில், தொடா் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, லிலாங் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) 163-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவைப் பிறப்பித்து தௌபால் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்று கூடுவதையும், பொதுமக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடை செய்கிறது.