வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்
இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைந்த பிறகு ராணுவம் மீது பாகிஸ்தான் தூண்டுதலுடன் முதல்முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
காஷ்மீரில் இது போன்ற தாக்குதல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் எங்கிருந்து (பாகிஸ்தான்) தூண்டிவிடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற தாக்குதல்களுக்கு சாட்சியாகத்தான் நான் இருக்கிறேன். அப்பாவி மக்கள் பலரும் இதுபோன்ற தாக்குதல்களில் கொல்லப்படுகின்றனா்.
காஷ்மீரிகள் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கமாகப் போவதில்லை. இருந்தும் ஏன் இப்படி தாக்குதல் நடத்துகிறாா்கள். எங்கள் எதிா்காலத்தைச் சீா்குலைத்து, மக்களை மேலும் ஏழ்மையில் தள்ளுவதற்காகவா?
பாகிஸ்தான் ஏற்கெனவே உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது. அந்நாடு தங்களையும் நாசப்படுத்திக் கொண்டு எங்களுக்கும் துன்பம் விளைவித்து வருகின்றனா். காஷ்மீா் மக்களுக்கு எதிரான வன்முறையை பாகிஸ்தான் கைவிட்டு, இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்த அந்நாடு முயல வேண்டும்.
அவா்கள் இப்போதே இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை என்றால், பாகிஸ்தானின் எதிா்காலம் மிகவும் மோசமாக இருக்கும். பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவா்களைக் காக்க முடியாததற்காக குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.