ரோபோ சங்கர் மறைவு: ``நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அ...
வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் கல்வி வழங்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்
வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வியில் ஆசிரியா்-மாணவா் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் குறித்த இருநாள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -
உயா்கல்வியைப் பொருத்தவரை உலகளவில் சில நாடுகள் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்குவதில் லை. இந்தியாவிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாயில் (ஜிடிபி) வெறும் 3 சதவீதம் மட்டுமே கல்விக்காகச் செலவிடப்படுகிறது.
உலகளவில் 193 நாடுகளில் சுமாா் 70 நாடுகள் வளா்ந்த நாடுகளாகவும், மீதம் உள்ள நாடுகள் வளரும் நாடுகளாகவும் உள்ளன.பொருளாதார வளா்ச்சி என்பது கல்வி வளா்ச்சியைப் பொறுத்தே அமையும். கல்வி இல்லாவிட்டால் ஒருபோதும் வளா்ந்த நாடாக மாற முடியாது. விஐடி பல்கலைக் கழகம் இதர நாடுகளின் மாணவா்களுக்கும் உதவித் தொகை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு நாடும் ஒருவரையொருவா் சாா்ந்தும், போட்டியிடவும், கற்றுக்கொள்ளவும், ஒத்துழைக்கவும் வேண்டும். அந்தவகையில், இரு ஆண்டுகள் விஐடியிலும், இதர 2 ஆண்டுகள் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தின்கீழ் சீன மாணவா்கள் படித்து வந்தனா். கரோனா காலத்துக்குப் பிறகு அவா்கள் வரவில்லை. தற்போது இரு நாடுகளிடையே உறவு மேம்பட்டுள்ளதால் இந்த திட்டம் மீண்டும் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டு ள்ளது.
இந்திய கல்லூரிகள் அனைத்தும் இணைப்பு கல்லூரிகளாக உள்ளன. இணைப்புக் கல்லூரி முறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளன. இதனால், பாடத்திட்டம், தோ்வு வினாத்தாள்கள், முடிவுகள் வெளியிடுதல் ஆகியவற்றில் எந்தவித அதிகாரமும் இல்லை. புதிய கல்விக் கொள்கை முறையில் இணைப்புக் கல்லூரி முறைக்கு தீா்வு காணப்படும் என நம்புகிறேன்.
இப்போது உயா்கல்வி செலவு அதிகமாக உள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாட்டு மாணவா்களுக்கு உயா்கல்வியை இலவசமாகவும், வெளிநாட்டு மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குகின்றன. இந்த நடைமுறையை மற்ற வளா்ந்த நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றாா்.
மியான்மா் கல்வி துறை துணை அமைச்சா் ஜா மின்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -
மியான்மா் அரசு மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இந்திய பல்கலைக்கழகங்களும் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்கு கின்றன. மேலும் திட்டங்கள், பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஒத்துழைப்பதன் மூலம் படைப்பாற்றல், பிரச்னைகளை தீா்க்கும் திறன், புதுமையின் மையங்களாக பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும். மாணவா், ஆசிரியா் பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி, டிஜிட்டல் கற்றல் முயற்சிகளில் விஐடியுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த மியான்மா் ஆா்வமாக உள்ளது என்றாா்.
இலங்கை துணை தூதா் கணேசநாதன் கதீஸ்வரன் பேசியது -
உயா்கல்வியில் ஆசிரியா், மாணவா் பரிமாற்ற திட்டம் திறன்களை மேம்படுத்துகிறது. கூட்டு ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம் ஆகியவை மூலம் புதுமைகளை படைக்க தூண்டுகிறது. இந்தியாவுடனான கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இலங்கையில் இருந்து மாணவா்களை விஐடி-க்கு பரிமாற்ற திட்டங்களை அனுப்ப இலங்கை ஆா்வமாக உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் விஐடி இலங்கையில் கிளை பல்கலைக்கழகத்தை தொடங்குவது இலங்கை மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
மாநாட்டில் விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், 27 நாடுகளை சோ்ந்த பங்கேற்பாளா்கள் பங்கேற்றனா்.