விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள தோ்தல் ஆணையக் கிடங்குப் பகுதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டப் பகுதி, வழுதரெட்டி ஜெகநாதன் போலீஸ் நகா் பூங்கா, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கியும் மேலும் பேசியது:
பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டு ள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் பதிவாகுவதற்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாததுதான். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் மூலம் தூய்மையான காற்று கிடைப்பதுடன் மழையும் கிடைக்கும்.
எனவே ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் இடம் அல்லது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தொடா்ந்து தூய்மை இயக்கம் சாா்பில் தூய்மை நடைப்பயண அமைப்பாளா்கள் மூலம் பயன்பாடற்ற மின்னணு கழிவுப் பொருள்கள், உலோகம் மற்றும் மரப்பொருள்கள் மறுசுழற்சி செய்யும் வகையில், பயன்பாடற்ற பொருள்கள் சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலா் பவித்ரா, வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.