பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்
வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில் வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் மேல் தமிழகத்தில் எங்கும் இல்லாதவாறு 92 அடி உயரத்தில் கையில் வேலுடன் கூடிய முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் நடத்தி வைக்க உள்ளனா்.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முதல் கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரக ஹோமம், கோபூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, அஷ்டபந்தனம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கி விமான மூலவா் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
திங்கள்கிழமை மண்டல அபிஷேகம் தொடங்க உள்ளது. திங்கள்கிழமை மாலை இசையமைப்பாளா் கங்கை அமரனின் இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தீா்த்தகிரி அறங்காவலா் குழு, ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.