நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
வேளாண் பட்ஜெட்: உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு!
முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பேரவையில் பேசிய அவர்,
"முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்படுகிறது.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாகவும் இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தப்படும். இறுதிச்சடங்கு நிதியுதவி ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படும்" என்று அறிவித்தார்.
இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ. 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன்!
மேலும், "மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், 'மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்', மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவுத் திட்டம், நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 'நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்' செயல்படுத்தப்படும்.
சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.
முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சிகளில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
1,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் 'முதல்வர் உழவர் நல சேவை மையங்கள்' அமைக்கப்படும்" என்றார்.