மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!
நாகலிங்க வடிவில் அற்புத பாறை! மாதேஸ்வர மலைப் பயணம் குறித்து தெரியுமா? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஏழுமலை என்றாலே நம் எல்லோர் நினைவில் வருவது திருப்பதி வெங்கடேஸ்வரர். ஆனால், ஈசனும் ஒரு ஏழுமலையில் வாசம் கொண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யமூட்டும் தகவல். அங்கே சென்று பார்த்த என் அனுபவத்தை நீங்களும் மனக்கண்ணால் பாருங்களேன்.
ஒரு சிலரின் ஆசைகள் எப்போது பூரித்தியாகும் என்பதில் ஒரு மர்ம முடிச்சு இருக்கும். என் சொந்த ஊர் சேலம் என்றாலும், வாழ்க்கைப்பட்டது மைசூருவில். ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் நிகழ்விற்காக சேலம் செல்வதுண்டு.
நேரடி அரசு பஸ் மேட்டூர், மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால் வழியாக பலமுறை சென்றாலும், என் விருப்பமான கோயிலுக்கு செல்லவே முடிந்ததில்லை. பஸ் மலையில் இடை நிற்றல் வெறும் 5 நிமிடங்களே. கோபுர தரிசனம் மூலம் ஆற்றுப்பட வேண்டிப்போனது.

30 ஆண்டுக்கும் மேலான என் ஆசை இந்திய இளைஞர் விடுதி சங்கம் (YHAI மைசூரு கிளை) மூலம் நிறைவேறியது எனலாம்.
மாதேஸ்வர மலையில் உள்ள நாகமலை என்ற இடத்துக்கு மலையேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 7 மணிக்குப் புறப்பட்ட பயணம் 30 கி. மீ தொலைவில் உள்ள திருமகூடலு நரசிம்மபுரத்தில் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டது. உப்புமா , கேசரி, வடை மற்றும் காபியை ருசிகரமக முடித்துக் கொண்டு பயணம் தொடர்ந்தது.
மேலும் சுமார் 80 கி மீ தூரம் கொள்ளேகாலு என்ற சிறு நகரம் வழியாக தாளு பெட்டா என்ற இடத்தில பஸ் நின்றது.
'ஓம் ஹர ஹர மஹாதேவ' கோஷத்துடன் மலை பாதை ஆரம்பத்தில் உள்ள நுழைவளைவு கம்பிரமாக வரவேற்கிறது (படம் 1 ).

சாலையோர பிள்ளையாரிடம் அனுமதி பெற்றப் பின்னர், 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் 15 கி மீ பயணித்து நாம் தங்க வேண்டிய விருந்தினர் விடுதிக்கு வந்தோம் (படம் 2 ).
கோயில் நிர்வாகம், தனியார் ட்ரஸ்ட் சார்பாகவும் தங்கும் விடுதிகள் நிறைய இருக்கின்றன. நேரம் மதியம் 1 மணி. சுட்டெரிக்கும் வெயில். விடுதி அறையில் கொஞ்சம் சுதாரித்த கொண்டப் பின்னர், அமைப்பாளர் கொணர்ந்த மதிய உணவாக பிசிபேளே பாத், தயிர் சாதம், போண்டா ருசித்தோம். கொஞ்சம் குட்டி உறக்கத்துக்குப் பின், 4 மணியளவில் கோயில் தரிசனத்துக்கு கிளம்பினோம்.
கோயிலுக்குப் போகும் முன், மாதேஸ்வரனின் வரலாற்றை தெரிந்து கொண்டால் நலமல்லவா. இதோ, 15ம் நூறாண்டுக்குப் பின் நோக்கி பயணிப்போம்.

அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்த சுமார் 3000 அடி உயர மாதேஸ்வர மலைப் பிரதேசத்துக்கு, மாதப்பா என்பவர் 15ம் நூற்றாண்டில் வந்தார்.
இவரிடம் இருந்த வசீகரத்தை கண்ட சுத்துர் மற்றும் குந்துர் மடத்தை சேர்ந்தவர்கள் கல்வி உள்ளிட்ட பல்வேறு கலைகளில் இவரை மேம்படுத்தினார்கள். இவர் நடத்திய அதிசயங்களை கண்டு மக்கள் வியந்தார்கள்.
புலியுடன் வலம் வந்த இவரை ஈசனின் அவதாரமாக எண்ணினார்கள். மாதப்பா-உடன் ஈஸ்வர நாமத்தை இணைத்து மாதேஸ்வரா என்று அழைக்கப் படலானார்.
ஷ்ராவன என்ற அசுரர்/அரசன் அங்கே உள்ள முனிவர்கள் மற்றும் பழங்குடி மக்களை தன் கருப்பு மந்திர சக்தியால் துன்புறுத்தி வர, மாதப்பா அந்த அரக்கனை ஒழித்து அந்தப் பிரதேசத்தில் நிம்மதி பரவி வாழ்க்கை மேம்பட வழி வகுத்தார். ஒரு நாள் திடிரென்று அவர் மறைந்து போக, அந்த இடத்தில சுயம்பு லிங்கம் இருக்க கண்டார்கள். அதுவே சிறுகோயில் ஆகி, பின்னர் ஜூஞ்சே கவுடா என்ற ஜமீன்தார் பக்தரால் பெரிய கோயிலாக உருமாற்றம் பெற்றது.
மாதேஸ்வரா வரலாறு ஜனபத கீத (நாட்டுப்புற பாடலகள்) வடிவில் இன்றும் பாடப் பட்டு வருகின்றன. இப்பிரதேச சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு மாதேஸ்வரனே குலதெய்வம்,
நாம் சென்ற சனியன்று கூட்டம் குறைவாக இருந்தது. இலவச தரிசன (சிறப்பு கட்டண தரிசனம் ரூ 500) வரிசையில் நகர்ந்துசெல்ல, ஒரு பூசாரி நம் நெற்றியில் விபுதிப் பட்டை பூசி விட்டார்.
மாதேஸ்வரன் தரிசனம் முடித்து கோயிலை வலம் வந்தோம் (படம் 3 ).

உருளு சேவை, நெய் தீப குச்சியுடன் உலா, வெள்ளி கவச தடியுடன் கோயில் வலம் என்று பக்தர்கள் வேண்டுதலாக செல்வதை காணலாம். துடைப்பம் கொண்டு ரத உலா பாதையை சுத்தம் செய்வதும் வேண்டுதலாக சிலர் செய்கிறார்கள்.
திரிசூலத்துடன் புலியின் மேல் உட்கார்ந்த நிலையில் இருக்கும் மாதேஸ்வரனின் திருவுருவ சிலை (81 அடி உயரம்) கோயில் அருகாமையில் உருவாக்கப்பட்டு வருகிறது (படம் 4) .

கோயில் வெளி வளாகத்தில் பலவேறு காட்சிகளை செல்போனில் பதிந்து கொண்டு, கோயில் நிர்வாகத்தார் நடத்தும் பெரிய அன்னதான கூடத்துக்கு விரைந்தோம்.
பாயசம், சாதம், சாம்பார், ரசம் மற்றும் மோர் அன்றயப் பட்டியல். சாப்பிட்டப் பிறகு எவர்சில்வர் தட்டுக்களை கழுவி தொட்டிகளில் நாமே போட்டு விட வேண்டும். அடுத்த நாள் விடியலுக்கு முன்னரே நாகமலையில் குடி கொண்டிருக்கும் மாதேஸ்வரனை தரிசிக்க மலையேற்றம் இருப்பதால், விரைந்து சென்று துயில ஆரம்பித்தோம்.

காலையில் கடன், குளியல் முடித்து ஜீப் பயணத்துக்கு ரெடியோனோம். 4-வீல் ட்ரைவிங் வசதி கொண்ட போர்ஸ் ஜீப்-ல் கிளம்பினோம். டர்ட் -ட்ராக் பாதையில் துள்ளி துள்ளி வளைந்து வளைந்து சுமார் 7 கி.மீ யை 30 நிமிடத்தில் இண்டிகநத்த கிராமத்திற்கு வந்தது.
நேரம் காலை 7.30. இங்கிருந்து கற்பாதையில் சுமார் 7 கி.மீ சென்றால் நாகமலையில் குடி கொண்டிருக்கும் மதேஸ்வரனை தரிசிக்க முடியும்.
பாதையின் சரிவு மேல்நோக்கி சிலசமயம், கீழ்நோக்கி சிலசமயம் என்று மாறி மாறி வருகிறது (படம் 5 ).

வழியில் ஆங்காங்கு உள்ள சிறு கடைகளில் குடிநீர், கூல் ட்ரிங்க் , வடை, பஜ்ஜி கிடைக்கின்றன. மூன்று கி மீ சென்றவுடன், நிழல் கொண்ட பகுதியில் அமைப்பாளர் எங்களிடம் கொடுத்திருந்த ரைஸ்-பாத் சிற்ற்றுண்டியை காலி செய்தோம் (படம் 6,7 ). இதமான வெய்யிலில் பயணம் தொடர்ந்தது. 10 மணியளவில் தூரத்தில் மணியோசை காதில் விழ, கோயில் அருகாமை புலப்பட்டது.
கோயிலின் முன்புள்ள திரிசூலம், கோயில் மணிகள் எங்களை வரவேற்றன (படம் 8).

லிங்க வடிவில் மாதேஸ்வர தரிசனம் முடித்து, கோயிலை வலம் வந்தோம். உச்சியில், 10 அடி உயர பாறை லிங்கமாக காணப்பட அதன் பக்கத்தில் நாகம் படமெடுப்பது போன்று இன்னொரு பாறை

எங்கள் குழுவின் கடைசி நபர் வருவதற்கு 11 மணியாகி விட்டது. உச்சியிலிருந்து ரம்மியமான மலை காட்சிகள் (படம் 10) மற்றும் குழு போட்டோக்களை எடுத்தப் பிறகு திரும்பி செல்லும் பயணம் தொடங்கியது.
மதியம் 2 மணி அளவில் எங்கள் மலையேற்றம் முடிந்தது. விருந்தினர் மாளிகையில் மதிய உணவு உட்கொண்டப் பின்னர், 4 மணியளவில் மைசூருக்கு கிளம்பப் பயணம் ஆரம்பித்தது.

இரவு 8.30 மணிக்கு, ஜெய் மகாதேவா , ஜெய் மாதப்பா, ஜெய் மாதேஸ்வர முழக்கங்களுடன் அன்பர்கள் (படம் 11 ) விடைப்பெற்று கொண்டனர்.

இது போன்ற மலையேற்றப் பயணங்கள் நம் உடலையும், மனதையும் வலுப் படுத்துகின்றன. ஆனால், மலைப்பாதை எங்கும் பிளாஸ்டிக் உறை, பாட்டில்கள் நிரம்பி இயற்கை அன்னையை நலிவடைய செய்கிறோம் (படம் 12).

பின்னர், இயற்கை நம்மைப் பழி வாங்கினால் 'அய்யோ -குய்யோ' என்று அழுகிறோம். சிந்தித்து செயல்படுவோம்.
பின் குறிப்பு: பணி ஒய்வுக்குப் பின்னரும் என்னைப் புத்துணர்ச்சியாக இருக்க இது போன்ற சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் YHAI மைசூரு கிளைக்கு நன்றி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.