10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவது வீரர், குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்துக்கு எதிரான நேற்றையப் (பிப்.20) போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் ஷமி கூறியதாவது:
2015க்குப் பிறகு நான் ஒருவேளை உணவு மட்டுமே உண்ணுகிறேன். காலை, மதியம் உண்ணாமல் இரவு உணவு மட்டும் உண்கிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பழகிவிட்டால் எளிமையாகிவிடும்.
என்சிஏவில் இருக்கும்போது எனது உடல் எடை 90கிலோவை நெருங்கியது. காயத்திலிருந்து மீண்டு வரும்போது 9 கிலோவைக் குறைத்தேன். இந்த நிலைமையில் இருக்கும்போது உங்களுக்கு நீங்களே சவால் அளித்துகொள்ள வேண்டும்.
சிறந்த விஷயம் என்னவென்றால் நான் சுவையான உணவுகளை உண்ண விரும்புவதில்லை. இனிப்புகளிடம் இருந்து தள்ளியே இருக்கிறேன். எதையெல்லாம் சாப்பிடக்க்கூடாதோ அதிலிருந்து தள்ளியே இருக்கிறேன்.
எப்போதாவது சில சமயங்களில் மட்டும் பிரியாணி சாப்பிடுகிறேன் என்றார்.