விசுவாசியும் துரோகியும் சேர முடியுமா? இபிஎஸ்
விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் சேர முடியுமா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கட்சி தொண்டர்களையும், தமிழ்நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், அதிமுக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. இன்றைக்கு, நம்முடைய கட்சிக் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது.
பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
இதையும் படிக்க: பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து!
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும்.
எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று நம் இதய தெய்வம் அம்மா சூளுரைத்தார்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.