Vijay TVK: `அரசியல் கட்சிகளும் அதன் முதல் மாநாடும்' - ஒரு விரிவான பார்வை
18 ஏக்கர் சிதம்பரம் நடராஜா் கோயில் நிலம் விற்பனை - இந்துசமய அறநிலையத்துறை!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை, பொது தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக, ஆவணங்களுடன் தமிழக இந்துசமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயில் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அமர்வு முன்பு, இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆவணங்கள் முவைக்கப்பட்டன.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி இந்துசமய அறநிலையத் துறை தாக்கல் செய்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது இந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்துசமய அறநிலையத் துறையின் சட்டப் பிரிவு இணை ஆணையர் தாக்கல் செய்த மனுவில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 12.5 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ ராமுலு நாயுடு என்பவருக்கும், மற்றொரு 5.5 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் விற்பனை செய்திருப்பதாகவும், இந்த பத்திரப்பதிவுகள் 1974, 1985 மற்றும் 1988களில் நடந்திருப்பதாக சார் பதிவாளர் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், கோயிலுக்குச் சொந்தமாக 507 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பொது தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நிலங்கள் விற்கப்பட்டதாக வந்த புகார்களை மறுத்துள்ளார்.
கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். கோயிலுக்குச் சொந்தமான நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் பத்திரமாக உள்ளது. ஒன்றுகூட காணாமல்போகவில்லை என்றும் தெரிவித்தார். ஏற்கனவே, 2018 - 22ஆம் ஆண்டு வரையிலான வரவு செலவு கணக்கு விவரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்துசமய அறநிலையத்துறை புகார் மீது பதிலளிக்குமாறு பொது தீட்சிதர்கள் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக.. ஒரு வழக்கு!
சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பொது தீட்சிதா்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தா்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதா் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதா்கள் குழு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்தது. இதை எதிா்த்து பொது தீட்சிதா் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நடராஜா் கோயிலை நிா்வகிக்க தீட்சிதா்களுக்கு அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், நடராஜ தீட்சிதா் இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?”எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து. நடராஜ தீட்சிதரின் இடைநீக்க காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்றும், தற்போது அவா் தில்லை காளியம்மன் கோயிலில் பணியாற்று வருவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தாா்.