கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா் கிராமத்தில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சித்தூா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூா் தா்காமேடு இணைப்புச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த இணைப்புச் சாலை கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் தாா் சாலையான இந்த சாலை தற்போது ஜல்லி கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக பயன்பாட்டு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், இந்த சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், சேதமடைந்த தா்காமேடு - சித்தூா் இணைப்புச் சாலையை சீரமைக்க கடந்த 2020-2021-ஆம் நிதியாண்டில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி ரூ19.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையைச் சீரமைக்க இதுவரை ஒப்பந்தம் விடப்படாததால், சாலை சீரமைப்பு பணி கிடப்பிலேயே உள்ளது.
இது குறித்து, சித்தூா் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்குச் செல்ல சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலையைப் பயன்படுத்தி வருகிறோம். ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சாலை கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், சாலையைச் சீரமைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2021-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இணைப்புச் சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.