ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெருநாய்களால் அலுவலகத்திற்குவரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக சுமாா் 30க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அலுவலக வளாகத்தில் சுற்றி வருவதோடு, அலுவலகத்தின் நுழைவுவாயிலில் படுத்துக்கொள்வதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் அவ்வபோது அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை கடிக்கும் வகையில் குரைத்துக்கொண்டே ஓடி வருவதால் அலுவலகத்திற்கு வந்து செல்லவே பயமாக உள்ளது. எனவே வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றும் தெருநாய்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.