இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்
3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர்ந்து உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.
இதனிடையே, ”நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார்.
அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(மே 29) செய்தியாளர்களைச் சந்தித்து, ”அன்புமணிதான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணிதான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை, ஆதாரப்பூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.
எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது எனது தவறு தான். தவறு செய்தது அவர் அல்ல, நான்தான்” என்று அவர் பேசினார்.
இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை( மே 30) முதல் மூன்று நாள்களுக்கு கட்சி நிர்வாகிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.
பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. மாவட்டந்தோறும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாளை முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
அன்புமணியின் அடுத்த நகர்வு குறித்து 3 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்திற்கு பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை அன்புமணி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நேபாளத்தில் 18வது குடியரசு நாள்: மன்னராட்சி ஆதரவாளர்கள் பேரணி!