சுந்தர் பிச்சையின் மாஸ்டர் பிளான்; இந்தியாவில் ₹1.25 லட்சம் கோடியில் 'Google AI ...
BB Tamil 9 Day 8: ‘நடிப்பு அரக்கன்’ டாஸ்க்; கனி அக்காவிற்கு ஸ்கெட்ச் போடும் பாரு - பரபரக்கும் வீடு
‘வெறும் சத்தம் மட்டுமே போடற இடமா இந்த வீட்டை மாத்திடாதீங்க. ஆட்டத்தை சுவாரசியமாக்குங்க’ என்று விஜய் சேதுபதி சொல்லி விட்டுச் சென்றதால் போட்டியாளர்களிடம் சிறிது மாற்றம் தெரிகிறது. எதையோ முயல்கிறார்கள். ஆனால் அது சுவாரசியமாக இருக்கிறதா என்று பார்த்தால். இல்லை.
நாமினேஷன் பிராசஸின் போது, ஏறத்தாழ ஒட்டுமொத்த வீடே பாருவை நாமினேட் செய்தது ரணகளமான சம்பவம். விட்டிருந்தால் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து கூட ஆட்கள் வந்து நாமினேட் செய்திருப்பார்கள். பாருவின் இம்சைகளும் அலப்பறைகளும் அப்படியொரு ரகமாக இருக்கிறது.

அலாரம் அடித்தாலும் சூப்பர் டீலக்ஸ் வீட்டின் தூக்கம் கலையவில்லை. எழ மனமின்றி படுத்திருந்தார்கள். “நாங்க சீக்கிரமா எழுந்திருச்சு அவங்களை டிஸ்டர்ப் பண்ணியிருக்கணும்” என்று விசாரணை நாளில் வினோத் சொன்ன ஐடியாவை விசே கூட பாராட்டினார். ஆனால் இன்று ஏனோ அவர்கள் அதைப் பின்பற்றவில்லை.
கொரானோ சமயத்தில் தட்டில் கரண்டி வைத்து சத்தம் எழுப்பி நோயை விரட்டிய மகத்தான ஐடியா போல, சூப்பர் வீட்டை எழுப்புவதற்காக சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து அடித்து சத்தம் எழுப்பினார்கள். ஆதிரையுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதைத் தவிர FJ இன்றுதான் உருப்படியாக ஒரு விஷயம் செய்தார். அவரும் தன் வாயால் இசை சத்தங்களை எழுப்பி உதவி செய்தார்.
ஆனால் இந்த ஐடியா வேலைக்கு ஆகவில்லை. இவர்கள் போடும் சத்தத்திற்கு ஏற்ப சுபிக்ஷா குத்து டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார். ‘எங்களுக்கு வலிக்கலையே’ என்கிற சமாளிப்பு டெக்னிக்.
சூப்பர் டீலக்ஸ் வீடு மொத்தமும் எழாமல் அடுப்பைப் பற்ற வைக்க முடியாது என்பதால் கனியக்கா ஒரு ஐடியா செய்தார். நேற்று மீதமிருந்த சோற்றில் தண்ணீரையும் உப்பையும் போட்டு கஞ்சி தயார் செய்தார். பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அதை கோப்பையில் ஏந்திக் கொண்டு “எத்தனை ருசியா இருக்கு தெரியுமா?” என்று சப்புக் கொட்டி சாப்பிட்டு சூப்பர் வீட்டை வெறுப்பேற்ற முயன்றனர்.

இத்தனை நாள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட வீடு, அடுத்த நாளே அதை மறந்து விட்டது. ஜக்கூஸி பாத்டப்பில் தண்ணீர் திறந்து குளிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘கக்கூஸிலிருந்து ஜக்கூஸிக்கு’ என்று விளம்பர வாக்கியம் போல இதைச் சொன்னார் வினோத். இந்த குளியல் காட்சியை எட்டிப் பார்க்க முயலும் அநியாயத்தை வேறு திவாகர் செய்தார். (யோவ். வினோத்து.. மறைக்காதய்யா. தள்ளி நில்லு!)
ஆனாலும் அரோராவை திவாகருக்கு அநியாயமான பிடித்திருக்கிறது போல. முருக பக்தர்கள் ‘அரோகரா.. அரோகரா’ என்று பரவசப்பட்டு கத்துவதைப் போல அரோரா மீது ரொமான்ஸ் பக்தி கொண்டு அந்தப் பெயரையே கத்திக் கொண்டிருக்கிறார். (சின்னப் பசங்க பலூனுக்கு ஆசைப்படலாம்.. 90’ஸ் கிட்ஸ் ஆசைப்படலாமா?!) கண்ணாடி வழியாக அரோரா முத்தம் தந்ததின் காரணமாக “ஏ.. சூப்பர் வீடு பாவம்ப்பா.. நான் அவங்களைத்தான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று உடனே கட்சி மாறி விட்டார். “பார்த்தீங்களா.. நான் ஒரு உம்மா கொடுத்தா.. உங்க டீமே காலி” என்று இதை வேறு அரோரா பெருமையுடன் சொல்லிக் கொண்டார்.
இந்தக் களேபரத்தின் இடையே உப்புக் கஞ்சி அண்டாவை நைசாக தூக்கிக் கொண்டு சூப்பா் வீட்டிற்குள் ஓடி விட்டார் வினோத். “ஏண்டா.. மிச்சமிருந்ததே அந்தக் கஞ்சிதான். அதை வெச்சுதான் அவங்களை வெறுப்பேத்த டிரை பண்ணோம். இப்ப அதையும் தொலைச்சிட்டு நிக்கறமே” என்று ஒருவரையொருவர் பழி போட்டுக் கொண்டார்கள்.
காலையில் இருந்து உணவு இல்லாமல் இருந்த காரணத்தினால் ரம்யா மயக்கம் போட்டு விழ வீடு பதைபதைத்து முதலுதவி செய்தது. பிறகு ரம்யாவிற்கு என்ன பிரச்சினை என்பதை சொல்லாமலேயே வேக்அப் பாடலை ஒலிக்க வைத்து ஆவேசமாக ஆடினார்கள். (ரம்யாவின் ‘ஆடல் பாடல்’ கலையில் இந்த மயக்கமும் ஒன்றா?!)

கஞ்சித் தொட்டி கலவரம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எஃப்ஜேவும் ஆதிரையும் உக்கிரமாக ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். “நீ ஏன் என் கூட பேச மாட்டேன்ற” என்று ஆதிரை கேட்க, “நீ யாரைத்தான் பேச விடற.. பிக் பாஸை கூட பேச விட மாட்டேன்ற” என்று எஃப்ஜே சொல்ல… இதே விஷயத்தை இருவரும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். (இதுக்காகவே பிக் பாஸ் ஆதிரைக்கு சீசன் முழுக்க மாஸ்க் போட்டு விடலாம்!)
இரு வீட்டிற்கு நடுவே இடமாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘நடிகன்டா’ டாஸ்க்கில் சூப்பர் வீடு ஜெயித்தால் ஸ்வாப் நடக்காது. ஒருவேளை பிக் பாஸ் வீடு ஜெயித்தால் நடக்கும். அங்கிருந்து மூன்று நபர்கள் சூப்பர் வீட்டிற்கு இடம் பெயர்வார்கள். சூப்பரில் இருந்து இரண்டு நபர்கள் இடம் மாறுவார்கள்.
இந்த ‘நடிகன்டா’ டாஸ்க்கில் திவாகரை ஏன் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை. விட்டிருந்தால் விஜய்சேதுபதியையே தோற்கடித்து அவர்தான் முதல் பரிசு வாங்கியிருப்பார் என்பது காரணமாக இருந்திருக்கும். (வீராச்சாமி படத்தின் டிராஜேந்தர் காட்சியை திவாகர் நடித்துக் காட்டினால் எப்படியிருக்கும்?!)
முதலில் வந்த சபரி ஓரளவிற்கு பொருத்தமாக வசனம் பேசினால் நிறைய இடங்களில் சிங்க் ஆகவில்லை. ஆஸ்கர் விருது வாங்கும் கவனக்கூர்மையோடு தயாராகி துள்ளிக்குதித்து டப்பிங் பேச வந்தார் பிரவீன். ஆனால் 24x7 பஞ்சாயத்தோடு திரியும் பாரு இருக்கும் இடத்தில் அது நடக்குமா? நடுவர்களான எஃப்ஜே, வியன்னா பக்கத்தில் பாரு, திவாகர் கூட்டணி அமர்ந்திருந்தது. ‘தள்ளி உக்காருங்க’ என்று எஃப்ஜே சொல்லியதும் “ஏன்.. நீதான் தள்ளிப் போயேன்” என்று பாரு முரண்டு பிடிக்க, வழக்கம் போல் பாருவிற்கு சப்போர்ட்டாக திவாகரும் களம் இறங்க…

“டேய்.. மேத்ஸ் எக்ஸாமிற்கு ஃபார்முலாலாம் மனப்பாடம் பண்ற மாதிரி தயார் ஆகிட்டு வந்திருக்கேன். சண்டை போட்டு என்னை டைவர்ட் பண்ணிடாதீங்கடா” என்று பிரவீன் கதறினாலும் சண்டை நிற்கவில்லை. எனவே வசனத்தை மறந்து விட்டு தடுமாறி தலையில் அடித்துக் கொண்டார். (இல்லாட்டி மட்டும் அறுத்து தள்ளியிருப்பாரு - பாரு மைண்ட் வாய்ஸ்!)
“உனக்கு நடிக்க வரலை. அதுக்கு எங்க மேல பழி போடாத. நடிப்பு என்னும் கலைக்காகவே அவதாரம் எடுத்து வந்திருக்கிற நான் இருக்கற இடத்துல இன்னொருத்தன் நடிச்சுட முடியுமா?” என்று திவாகரும் பிரவீன் மீது பாய, திரையில் இருந்த விஜய்சேதுபதியே வசனத்தை மறந்து விட்டு இவர்களை திரும்பிப்பார்க்கும் அளவிற்கு கலவரம் நடந்தது.
அடுத்த வந்த விக்ரமின் வாய்ஸிற்கும் விஜய்சேதுபதிக்கும் செட் ஆகவில்லை. அவரும் வசனத்தை மறந்து சொதப்பினார். அடுத்து வந்த கம்ருதின் “எனக்கு வானம் பிடிக்கும்.. பூமி பிடிக்கும்.. காஃபி பிடிக்கும் சர்க்கரை பிடிக்கும்” என்று தனி டிராக்கில் சிங்க் ஆகாமல் பேச “இப்படியே நீ பேசினா எங்களுக்கு பைத்தியம்தான் பிடிக்கும். வந்து உக்காரு” என்று அவரை அமர வைத்தார்கள்.
இறுதியில் பிக் பாஸ் வீடு இந்த டாஸ்க்கில் வென்றது. எனவே ஸ்வாப் நடக்கும். யார் எந்த வீட்டிற்கு போகப் போகிறீர்கள் என்பதை நீங்களே கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள் என்று அடுத்த சண்டைக்கான விதையைப் போட்டார் பிக் பாஸ். பார்வதியும் திவாகரும் கூட்டணியாக சூப்பர் வீட்டிற்கு போகவிருப்பதாக சொல்ல ‘யப்பா.. சாமிகளா.. இதைத்தான் நாங்களும் எதிர்பார்த்தோம். மகராசனா போய்ட்டு வாங்க” என்று கையெடுத்து கும்பிட்டார் கனி. கூடவே ஆதிரை.

சூப்பர் வீட்டிலிருந்து அரோராவும் கம்ருதீனும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. “நான் அங்க போறதே.. அரோகரோவிற்குத்தான். இந்தச் சமயத்துல அந்தப் பொண்ணு.. இங்க வந்தா என் நெஞ்சு தாங்காது” என்று ரொமான்ஸ் வலியில் திவாகர் அலற “நான் வேற பலூன் வாங்கித் தரேன். நீ வாய்யா” என்கிற ரேஞ்சிற்கு பாரு அவரை இழுத்துச் சென்றார்.
சூப்பர் வீட்டிற்கு நாமினேஷனில் இருந்து 50% ஆடித்தள்ளுபடி உண்டு. யார் நாமினேஷன் ஃப்ரீ பாஸை வாங்கி தப்பிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும். “நீங்கள்லாம் போன வாரமே தப்பிச்சுட்டிங்க. நாங்க நாமினேஷன் போய்ட்டு வந்துட்டோம்” என்கிற காரணத்தைச் சொல்லி வாக்குவாதம் செய்தார் பாரு. இதை மறுத்து ரம்யா சொன்ன காரணம்தான் விசித்திரமாக இருந்தது. “உங்களை கொடுமையா வேலை வாங்கி அந்த குற்றவுணர்வுல எனக்கு லூஸ் மோஷனே ஆயிடுச்சு..” என்று சொன்னது மருத்துவ உலகிற்கே பெரிய சவால் விடுகிற காரணம். இது தொடர்பாக திவாகருக்கும் ரம்யாவிற்கும் இடையே முட்டிக் கொண்டது.
இறுதியில் வியன்னா, ஆதிரை, வினோத் ஆகிய மூவரும் ஃப்ரீ பாஸ் பெற்று நாமினேஷனில் இருந்து தப்பிக்க, தொக்காக மாட்டிக் கொண்டார் பாரு. பிறகு நடந்த நாமினேஷன் சடங்கில் பாருவை வளைத்து வளைத்து குத்தினார்கள். இந்த ஒரு வாரத்திலேயே அத்தனை எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் திறமையைப் பெற்றிருக்கிறார் பாரு. வருபவர்கள் எல்லாம் ‘பாரு.. பாரு’ என்று உச்சரிப்பதைப் பார்த்து பிக் பாஸே மிரண்டு போயிருக்கலாம். ‘யாரு வெளிய போனாலும் சரி.. பாருவை மட்டும் விட்றக்கூடாது. கன்டென்ட் கிடைக்காது’ என்று யோசித்திருக்கலாம்.

கலையரசன் திவாகரை குத்தியது ஆச்சரியம். (பாரு கூடவே சுற்றுவதால் பொசசிவ்னஸ்?!). தனக்கு ஏற்பட்ட சிராய்ப்பிற்காக இந்த சீசன் முழுவதும் கெமியை பாரு பழிவாங்குவார் போலிருக்கிறது. ‘இந்தக் காயம் இன்னமும் கூட ஆறலை. பாருங்க.. இந்த வன்முறைக் கலாசாரத்தை தடுத்தே ஆகணும்’ என்கிற காரணத்தைச் சொல்லி கெமியை நாமினேட் செய்தார்.
ஆதிரை நாமினேட் செய்ய வந்த போது “இந்த மாஸ்க் எதுக்குன்னு இப்பவாச்சும் புரிஞ்சுதா?” என்று பிக் பாஸ் கேட்க “நான் மாட்டேன்னு சொன்னா.. கேக்கவா போறீங்க. நீங்களும் விஜய்சேதுபதியும் சோ்ந்து மண்டைய கழுவுவீங்க..” என்கிற தொனியில் ஆதிரை தலையாட்ட ‘ஓகே.. இனிமே மாஸ்க் தேவையில்லை’ என்று விடுதலை தந்தார் பிக் பாஸ். போலவே வெள்ளை யூனிபார்மிலிருந்து பிரவீனுக்கும் விடுதலை. ‘குட்பாய்’ என்று பிக் பாஸ் பாராட்ட, கண்ணில் ஜலம் வைத்துக் கொண்டார் பிரவீன்.
நாமினேஷன் முடிந்ததும் அதற்கான காரணங்களை மறைமுகமாக சொன்னார் பிக் பாஸ். ‘பாருவிற்கு எப்போதும் அடங்கிப் போகிறார்’ என்பதெல்லாம் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற மாதிரி நேரடியாகவே சொல்லியிருக்கலாம். ‘திவாகர்தானே?” என்று துள்ளிக் குதித்தார் பாரு.

“இந்த கனியக்கா எப்படியோ எஸ்கேப் ஆயிடறாங்க.. சோறு போட்டு பாசத்தை வளர்க்கிற டெக்னிக். அடுத்த வாரமாவது இந்தக் காரக்குழம்பை பிரிட்ஜ்ல இருந்து வெளியே ஊத்தணும்.. அதுக்கான வேலைகளை நாம பார்க்கணும்.. புரியுதா.. உனக்கு’ என்று பாரு பேசிக் கொண்டே போக “என்னைக் கொஞ்சமாச்சும் பேச விடேன்” என்று திவாகர் டென்ஷன் ஆக.. “என்ன.. சிட்டிக்கு கோபம்லாம் வருது” என்று ஜொ்க் ஆனார் பாரு. ‘இதுக்குத்தான் நான் பேசறதே இல்ல” என்று மௌனமாகி திருக்குறளை மனப்பாடம் செய்யச் சென்றார் கலையரசன்.
இந்த வாரத்தில் ‘பொம்மை டாஸ்க்’ மாதிரி ஒருவரையொருவர் முட்டித் தள்ளிக் கொண்டு ஓடும் முகமூடி டாஸ்க்கை பிக் பாஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போல. இந்தச் சுவரு இன்னமும் எத்தனை பேரை பலி வாங்கப் போகுதோ?!