Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; ...
Bison: `பைசனில் தனியாக நிற்க வேண்டும் என.!’ - அப்பா விக்ரம் குறித்து துருவ் | Exclusive
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.

கதாபாத்திரத்திற்கு மொத்தமாக தன்னை தயார்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் திருநெல்வேலியிலேயே தங்கி கபடி பயிற்சி எடுத்து அசல் நெல்லைக்காரராகவே உருமாறி நிற்கிறார் துருவ்.
`பைசன்' படத்தின் ரிலீஸையொட்டி துருவை சந்தித்துப் பேசினோம்..!
`` `பைசன்' திரைப்படத்திற்கு ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கிறீர்கள். இந்த பயணம் உங்களுக்கு உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எவ்வளவு சவாலாக இருந்தது?"
``இந்தப் பயணம் எனக்கு களைப்பூட்டியதாக நான் சொல்லமாட்டேன். தொடக்கத்தில் கபடி ஆட்டத்தைக் கற்றுக் கொள்ளும்போது டயர்ட் ஃபீல் வந்தது. பிறகு, இந்தப் படத்தையே என் வாழ்க்கையாக்கிவிட்டேன். மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்து படத்திற்குள் வரவேண்டியதாக இருந்தது. இதற்கு முன்பு நான் கபடி விளையாடியதே கிடையாது. சொல்லப்போனால், கபடியை நான் `கில்லி' திரைப்படத்தில்தான் பார்த்திருக்கிறேன்.
மூன்று வருடங்கள் முழுமையாக கபடி கற்றுக் கொண்டு படத்திற்கு வருவது மட்டும் கொஞ்சம் சவாலாக இருந்தது. அந்த நேரம், எனக்கு வாழ்க்கை குறித்தும், நடிப்பு குறித்தும் ஆழமாக சொல்லித்தந்தது. பர்சனலாகவும் அது எனக்கு தேவையான விஷயமாகப் பார்க்கிறேன். முக்கியக் கதாபாத்திரங்களைத் தாண்டி படத்தில் மாரி செல்வராஜ் சாரின் ஊர் மக்கள் அதிகமானோர் நடித்திருக்கிறார்கள். அவர்களும் சூழலை முழுமையாக உள்வாங்கி 'கன்டினியூட்டி, ஃபீல்டு க்ளியர்' என சினிமாவின் தொழில்நுட்ப விஷயங்களைச் சொன்னதெல்லாம் அவ்வளவு அழகாக இருந்தது.”

``நடிப்பிற்கு, மாரி செல்வராஜ் படத்தை தொடங்குவதற்கு முன் என்ன விஷயங்களைச் சொன்னார்? முடித்தப் பிறகு என்ன சொன்னார்?''
``படத்தை தொடங்கும்போது `இந்தப் படத்திற்கு நிறைய கடின உழைப்பும், போராட்டமும் தேவை. கபடியை உண்மையாகவே எடுக்கப்போகிறோம். அதனால் நீ பிளேயராகவே மாறி படத்தில் நடிக்க வேண்டும்' எனச் சொன்னார். அங்கு நான் கபடி ட்ரெயினிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய விளையாடிய மற்ற அனைவரும் உண்மையான அசல் விளையாட்டு வீரர்கள். காட்சியை முடித்தப் பிறகு `டேக் ஓகே' என மாரி செல்வராஜ் சார் கூறினாலே பெரிய பாராட்டு அது. படப்பிடிப்பு முடிந்த அன்று `சூப்பர் டா' எனப் பாராட்டினார். அவருடைய நம்பிக்கையையும் நான் காப்பாற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன்.”
`` `பைசன்' படம் நடந்துக் கொண்டிருக்கும்போது உங்களால் வேறு படங்களை கமிட் செய்ய முடியாத சூழல் உருவாகிவிட்டது. முடியை வெட்டி முழுக்க முழுக்க உங்களுடைய கவனம் 'பைசன்' படத்தின் மீது மட்டுமே இருந்திருக்கும். கமிட்மென்ட்களையும் பூர்த்தி செய்ய முடியாது. அப்படியான வேளையில் உங்களின் மனநிலை எப்படி இருந்தது?"
``இப்படத்தை என்னுடைய வாழ்க்கையாக நான் மாற்றிவிட்டேன். ஃபேமிலி, ரிலேஷன்ஷிப், நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் இதுவரை செய்த படங்கள் என அனைத்தையும் மறந்து நான் திருநெல்வேலியில் தங்கி படத்திற்கு தயாராகினேன். அங்கிருக்கும் மக்கள் தந்த அன்பு, அங்கிருக்கும் நண்பர்களுடன் கபடி விளையாடி நேரம் செலவழித்தது அழகான அனுபவமாக இருந்தது.
கபடி விளையாடி முடித்துவிட்டு நீச்சல் பயிற்சி செய்வோம். பிறகு நண்பர்கள் அனைவரும் இணைந்து தொட்டியில் குளிப்போம். மழை வந்தால் ஸ்பீக்கரில் பாடல் போட்டு அனைவரும் நடனமாடுவோம். பிறகு மீண்டும் கபடி பயிற்சி முடித்துவிட்டு மாலை வேளையில் பரோட்டாவும் அல்வாவும் சாப்பிடுவோம். இப்படியான ஒரு அழகான அனுபவம் கிடைத்ததை எண்ணி நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மாரி சார் என்னை நம்பி `போய் கற்றுக் கொள்' என அனுப்பியதற்கும் நன்றி!”

``படத்திற்காக என்னென்ன விஷயங்கள் புதிதாகப் பழகினீர்கள்?''
``நிறைய வொர்க் செய்தோம். ஆனால், அதற்கான காட்சிகள் படத்தில் இருக்காது. நாங்கள் செய்த விஷயங்கள் படத்திற்குத் தேவைப்படும் அந்த உடல் மொழியைக் கொண்டு வந்தது. வயலில் இறங்கி வேலைப் பார்த்ததும் என்னுடைய கபடி விளையாட்டை இன்னும் இயல்பாக மாற்றியது. `வயலில் இறங்கி, மாடுகளுடன் நீ பழகும்போதுதான் உன்னுடைய கபடி விளையாட்டு மெருகேறும்' என மாரி சார் சொன்னார். அவர் சொன்னதுபோலவே, நான் மற்ற விஷயங்களைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு என்னுடைய விளையாட்டுக்கு அது பெரிதும் உதவியது.”
``நடிகர் பசுபதியின் கதாபாத்திரம் `பைசன்' படத்தின் எமோஷனுக்கு மிக முக்கியமானது எனச் சொல்கிறார்களே...''
``ஆம், பசுபதி சாரின் கதாபாத்திரம் `பைசன்' படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். அவருடைய கேரக்டரில் பெரிய எமோஷனல் கனெக்ட் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி அவரொரு லெஜென்ட். என்னுடைய தந்தையுடன் அவர் அதிகமாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடன் பணியாற்றும்போது நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். படப்பிடிப்பில் தினந்தோறும் அவருடன் அமர்ந்து நடிப்பு தொடர்பாகப் பலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் என்னுடைய தந்தையுடன் மிக நெருக்கமென்பதால் எனக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்.”

``அவருடைய கதாபாத்திரத்திற்கு உங்களுடைய தந்தை விக்ரமையும் நடிக்க வைப்பதற்கு கேட்டதாக மாரி செல்வராஜ் சொல்லியிருந்தாரே, நீங்கள் முக்கியமெனக் கருதும் இப்படத்தில் அப்பாவும் உடனிருக்க வேண்டும் என எண்ணினீர்களா?''
``நான் ஏற்கெனவே அப்பாவுடன் இணைந்து `மகான்' படத்தில் நடித்துவிட்டேன். `ஆதித்ய வர்மா' படத்தைக் கிட்டத்தட்ட அவர்தான் டைரக்ட் செய்தார்.
ஆம், அந்தக் கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கும்தான். நான் இந்தப் படத்தில் தனியாக நிற்கவேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். என்றைக்கோ, அப்பாவைவிட்டு தனியாக நான் நகர வேண்டும். அப்படித்தான் இந்த `பைசன்' பயணத்தைப் பார்க்கிறேன்.”