Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; ...
அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களைக் கையாண்ட இந்திய வம்சாவளி கைது - சீனாவுக்காக உளவு பார்த்தாரா?
``புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்" என்று வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆஷ்லே ஜே டெல்லிஸ், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவராவார் (Tata Chair for Strategic Affairs).
`கார்னகி அறக்கட்டளை' உலக அரசியல், பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் (Think Tank) நிறுவனமாகும்.
தடை செய்யப்பட்ட அரசு சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான ஃபெடரல் விசாரணையில் 64 வயதாகும் டெல்லிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருப்பதையோ அல்லது தக்கவைத்துக்கொள்வதையோ தடைசெய்யும் 18 USC § 793(e) ஐ டெல்லிஸ் மீறியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்படும்வரை டெல்லிஸ் நிரபராதியாகக் கருதப்படுவார். மேலும் இதுவரையில் அவர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.
நிரூபிக்கப்பட்டால் டெல்லிஸ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வதுடன் $250,000 (ரூ.2,21,50,080) அபராதமும் விதிக்கப்படும்.
யார் இந்த ஆஷ்லே ஜே டெல்லிஸ்?
டெல்லிஸ் அமெரிக்காவில் உள்ள தெற்காசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க-இந்தியா உறவுகளின் முன்னணி நிபுணராவார். இவர் அமெரிக்க அரசின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளரின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியபோது, அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அரசாங்கப் பணிக்கு முன், டெல்லிஸ் RAND கார்ப்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
Striking Asymmetries: Nuclear Transitions in Southern Asia, Revising US Grand Strategy Toward China ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.