`மிகவும் அழகாக இருக்கிறீர்கள்'- இத்தாலி பிரதமரிடம் சொன்ன ட்ரம்ப்; சமூக ஊடகங்களில...
Karur Case: பில்கிஸ் பானு வழக்கு டு ஜல்லிக்கட்டு; CBI யை கண்காணிக்கும் அஜய் ரஸ்டோகி - யார் இவர்?
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்தபோது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு விசாரணைக் குழுவின் இதுநாள் வரையிலான விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தவெக கோரியபடி விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் இவருடன் இரண்டு அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக அல்லாமல், ஆனால் தமிழக கேடர் அதிகாரியாக இருக்கலாம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுவை வழிநடத்த நீதிபதி அஜய் ரஸ்டோகி நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த நீதிபதி அஜய் ரஸ்டோகி?
அஜய் ரஸ்டோகி
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜஸ் ரஸ்டோகி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 67 வயதாகும் இவர், 1982ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.
அரசியலமைப்புச் சட்டம், சேவை சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் பணியாற்றி வந்த அவர், 1990ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2006ஆம் ஆண்டில் அதே உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

2018ம் ஆண்டு திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அதே ஆண்டு நவம்பரில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நான்கரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர், 506 அமர்வுகளில் கலந்துகொண்டு 158 தீர்ப்புகளை எழுதியிருக்கிறார்.
2002 குஜராத் கலவரத்தின்போது இஸ்லாமிய கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன் 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 14 பேரை கொலை செய்த வழக்கில் 11 பேருக்கு 2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த கொடூர வழக்கின் குற்றவாளிகளை நன்னனடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய குஜராத் அரசு முடிவு செய்தது. இதுகுறித்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்டோகி மற்றும் விக்ரம் நாத் அமர்வு மே 2022ல் விசாரித்தது. 11 பேரை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை (ம) கொலை குற்றாவளிகள் 11 பேரும் மாலை, மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.
2024 ஜனவரி மாதம் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜால் பகுயான் அமர்வு, இந்த தீர்ப்பை ரத்து செய்தது. இது உண்மைக்கும் சட்டத்துக்கும் புறம்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு எனக் கூறியது. இதனை முன்னிட்டு அவர் பாஜக/இந்துத்துவ ஆதரவு நீதிபதி என்ற குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.
பிற முக்கிய தீர்ப்புகள்
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்யும் குழுவில் இந்தியப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கிய கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வில் அஜய் ரஸ்டோகியும் இடம்பெற்றிருந்தார்.
அஜய் ரஸ்டோகி எழுதிய தீர்ப்பில், தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டதுடன், தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க வேண்டுமானால், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

2020ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகளை, அவர்கள் சேர்ந்த ஆண்டை கணக்கில் கொள்ளாமல் நிரந்தரமாக்க வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கினார்.
நீண்ட காலமாக நோயுடன் போராடும் நோயாளிகள், கண்ணியத்துடன் மரணமடைவதற்கான கருணைக்கொலை உரிமையை 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. ஆனால், இதற்கான விதிமுறைகள் கடுமையாக இருந்த நிலையில், 2023ல் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி, அநிருத்த போஸ், ஹ்ரிஷிகேஷ், சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு இந்த விதிகளை சற்று தளர்த்தியது.
ஜல்லிக்கட்டு வழக்கு
தமிழ்நாடு தொடர்பான ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அஜய் ரஸ்டோகி இடம்பெற்றிருந்தார்.
2018-ம் ஆண்டில் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்தது.
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தையம் ஆகியவை கலாச்சார உரிமைகளா, மாநிலங்களுக்கு உரிமை உண்டா என்பதை இந்த அமர்வு விசாரிக்க வேண்டியிருந்தது. நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்டோகி, அநிருத்த போஸ், ஹ்ரிஷிகேஷ், சி.டி. ரவிக்குமார் இந்த வழக்கை விசாரித்து 2023ம் ஆண்டு தீர்ப்பளித்தனர்.
ஜல்லிக்கட்டு, கம்பளா உள்ளிட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.