`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
"ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை" - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு
ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.
இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின், மாநில தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தங்களின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அவ்வாறு எந்தவொரு முதலீடு செய்யவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என்றும், தி.மு.க அரசு மோசடி செய்வதாகவும் பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தி.மு.க அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு ஆகும்.
தி.மு.க அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கிவிட்டன.
இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழக முதலமைச்சரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்துப் பேசியது உண்மை.
ஆனால் இந்த சந்திப்பின்போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், தி.மு.க அரசின் புளுகு அரை நாளில் அம்பலமாகியிருக்கிறது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மட்டும்தான் என்று இல்லை. தொழில் முதலீடுகள் குறித்த தி.மு.க அரசின் அறிவிப்புகளில் 90% அறிவிப்புகள் பொய் மூட்டைகள்தான்.
அதனால்தான் தி.மு.க ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதைச் செய்ய தி.மு.க அரசு மறுக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கூகுள் நிறுவன உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும், அதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தமிழ்நாட்டை திரும்பிக் கூட பார்க்காத கூகுள் நிறுவனம் ரூ. 1.20 லட்சம் கோடியில் செயற்கை அறிவுத்திறன் மையத்தை ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க-வின் லட்சணம் இது தான். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை தி.மு.க அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க அரசின் இத்தகைய மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக பா.ம.க விரைவில் வெளியிட்டு அம்பலப்படுத்தும்."

ஆனால், அன்புமணியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ``ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டித் தீர்க்கிறார்.
நேற்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, எந்தவித தவறும் இல்லாத உண்மையான செய்தி" என்று ட்வீட் செய்திருக்கிறார்.