மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி
Kerala: எம்.எஸ்.சி எல்சா-3 கப்பல் விபத்து - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போர்ட் கொச்சி போலீஸ்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது. கப்பல் முழுமையாக மூழ்குவதற்கு முன், கப்பல் கேப்டன் உள்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள மாநிலத்தின் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரை ஒதுங்கின. கேரளா மற்றும் தமிழ்நாட்டு கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் மரத்தடிகள், முந்திரிகொட்டைகள் உள்ளிட்டவை கரை ஒதுங்கின.
இதற்கிடையே சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் கூடிய வான் ஹாய் 503 என்ற கப்பல் கண்ணூர் அருகே உள்ள கடலில் தீ விபத்தில் சிக்கியது. தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. கேரளாவில் அடுத்தடுத்து நடந்த 2 கப்பல் விபத்துக்களால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை ஏறப்ட்டது.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான கப்பல் கம்பெனி மீது வழக்குப்பதிவு செய்து இழப்பீடு பெறவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கப்பல் விபத்தை மாநில சிறப்பு பேரிடராக கேரள அரசு அறிவித்தது. மேலும் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாயும் 6 கிலோ அரிசியும் வழங்குவதாக அறிவித்த கேரள அரசு, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி எல்சா -3 கப்பலுக்கி எதிராக கேரளா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

சி.ஷாம்ஜி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போர்ட் கொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தவகல் அறிக்கையில், `எம்.எஸ்.சி எல்சா-3 கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவராக கப்பல் கேப்டனும், மூன்றாவதாக கப்பல் ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள சரக்குகளும், வெடிபொருட்களும் கப்பலில் இருப்பது தெரிந்தும், மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.