ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; ச...
Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.
அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். 10 நாள் கழிந்த நிலையில் நிலையில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மேகாலயாவில் மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் உடல் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா போலீஸார் சோனத்தைத் தேடிக்கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் போலீஸிடம் சோனம் சரணடைந்தார்.
சோனம் நேற்று மாலை ஹோட்டல் ஒன்றிலிருந்து தனது சகோதரனுக்கு போன் செய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட இந்தூர் போலீஸார் காஜிப்பூர் போலீஸாரைத் தொடர்பு கொண்டு ஹோட்டல் பெயரைச் சொல்லி சோனம் புகைப்படத்தை அனுப்பி வைத்து கைது செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து போலீஸார் பிடித்ததால் வேறு வழியில்லாமல் சோனம் போலீஸில் தானாகச் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. சோனம் இக்கொலையைக் கூலிப்படையை நியமித்துச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து கொலையில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
சோனமும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா என்பவரும் சேர்ந்துதான் இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜ் குஷ்வாஹாவிடம் முன்பு சோனம் வேலை செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அது திருமணத்திற்குப் பிறகும் நீடித்து இருக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இருவரது குடும்பத்திற்கும் சோனம்-ராஜ் குஷ்வாஹா உறவு குறித்து பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள் என்று ராஜா ரகுவன்சியின் சகோதரர் விபுல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''நான் இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் ராஜ் குஷ்வாஹாவை நேரில் பார்த்ததில்லை. அவரது பெயரை மட்டும்தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சோனத்திற்கு இக்கொலையில் தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ராஜ் குஷ்வாஹாவிற்கு இக்கொலையில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் சோனத்திற்கும் இக்கொலையில் தொடர்பு இருக்கலாம்.
இருவரும் முதலில் கவுகாத்தி கோயிலுக்குத்தான் செல்வதாகத் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென தங்களது திட்டத்தை மாற்றிக்கொண்டு இருவரும் மேகாலயா சென்றனர். திரும்பி வர டிக்கெட் கூட முன்பதிவு செய்யவில்லை'' என்று தெரிவித்தார்.
இது குறித்து ராஜா ரகுவன்சியின் தாயார் உமா கூறுகையில், ''பயணத்திற்கான டிக்கெட்களை சோனம்தான் முன்பதிவு செய்தார். எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பது குறித்து சோனம் இரு குடும்பத்திலும் சொல்லவில்லை.
சோனம் இப்பயணத்திற்குத் தனது தாயார் வீட்டிலிருந்து நேராக விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் எனது மகன் ராஜா ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு தேனிலவு சென்றான்.
நான் அவனிடம் ஏன் இந்த அளவுக்குத் தங்க ஆபரணங்களை அணிகிறாய் என்று கேட்டதற்கு, சோனம்தான் இவ்வளவு நகைகளை அணியச் சொன்னதாகத் தெரிவித்தான்.
சோனத்திற்கு இக்கொலையில் தொடர்பு இருக்குமானால் அவரைத் தூக்கிலிடவேண்டும். சோனம் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போலீஸார் இன்று காலை வரை எங்களிடம் சொல்லவில்லை. இக்கொலை குறித்து சி.பி.ஐ விசாரிக்கவேண்டும்.

சோனம் எதுவும் செய்யவில்லையெனில் அவரை ஏன் குற்றம் சொல்லவேண்டும். சோனம் உண்மையில் எனது மகன் மீது அன்பு வைத்திருந்தால் எனது மகனை எப்படிச் சாக விட்டிருப்பார். அவள் மட்டும் எப்படி உயிரோடு பாதுகாப்பாக வந்தார் என்பது உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்கவேண்டும்'' என்றார்.
சோனமும், ராஜா ரகுவன்சியும் கடந்த மாதம் 11ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டனர்.
சோனம் காய்ச்சலுடன் மயக்க நிலையில் ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவரை அதிகாரிகள் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அதனைத் தொடர்ந்து சோனம் போலீஸில் சரணடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கொலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.