Nobel Peace Prize: "நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்" - மரியா கொரினா ம...
Vairamuthu: "நல்ல பாடல்கள் வேண்டும் என்றால் பழைய பாடல்களைத் தேடுகிறார்கள்" - வைரமுத்து ஆதங்கம்
தமிழ் சினிமா வரலாற்றில் பாடலாசிரியர்கள் பட்டியலில் தனக்கென்று குறிப்பிடத்தக்க இடத்தைக் கொண்டிருப்பவர் கவிஞர் வைரமுத்து.
தனது பாடல்களுக்காக 7 முறை தேசிய விருது வென்றிருக்கும் வைரமுத்து, அதிக முறை தேசிய விருதுகள் வென்ற பாடலாசிரியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இளையராஜா - வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் - வைரமுத்து காம்போ பாடல்களுக்கென்று இன்றும் தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சமீபகாலமாக தமிழ் திரைப்படப் பாடல்களில் தமிழ் மொழி குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அது மாற வேண்டும் என்றும் வைரமுத்து கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்துவிடம், "தற்போதைய பாடல்களில் தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லையே" என்ற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்தார்.
அதற்குப் பதிலளித்த வைரமுத்து, "தமிழ் பாடல்களில் பிறமொழிகளுக்கு மத்தியில் தமிழும் கொஞ்சம் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்துக்கு மத்தியில், சமஸ்கிருதத்துக்கு மத்தியில் அல்லது ஓசைகளுக்கு மத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
இசை என்பது ஓசையாகிவிட்டது. இது மிகப்பெரிய விபத்து. அதனால் மொழி என்பது ஒலியாகிவிட்டது. இந்த இரண்டும் மீறி வரவேண்டும், மாறி வரவேண்டும்.
25 ஆண்டுகளுக்கு முற்பட்ட படங்கள் இப்போது மீண்டும் மறுவெளியீடு காண்கின்றன.
படங்கள் மறுவெளியீடு காண்பதற்கு நடிகர்களும், கதையும், வெற்றியும் மட்டும் காரணமல்ல பாடல்களும் காரணம்.

பெட்டிக்குள் பட்டுப் புடவைக்குப் பக்கத்தில் தாழம்பூவை வைப்பார்கள். தாழம்பூவின் நறுமணமும் மருத்துவக் குணமும் பட்டுப் புடவையில் பூச்சிகள் சேராமல் பார்த்துக்கொள்ளும்.
நல்ல பாடல்கள் தாழம்பூ செய்கின்ற வேலையைச் செய்கின்றன. நல்ல பாடல்கள் ஒரு படத்தைத் துருப்பிடிக்கவிடாமலும், பூச்சரிக்கவிடாமலும், பழைய பாசி பிடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றன.
நல்ல பாடல்கள் வேண்டும் என்றால் பழைய பாடல்களைத் தேடுகிறார்கள். இன்றும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. வெகு விரைவில் இது மாறும்.
நல்ல கதை, நல்ல இசை, பெண்களைப் பற்றிய கதை, காதல் கதை, வாழ்வின் மர்மங்களையும், வாழ்வின் மேன்மைகளையும் மெல்லிய மதிப்பீடுகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற கதைகள் வந்தால், பாட்டு மீண்டும் திரையுலகில் அரசாளும்" என்று கூறினார்.
சமகால தமிழ்த் திரைப்படப் பாடல்கள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.