பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?
Zubeen Garg: ``அவர் செய்ய விரும்பியவற்றை நான் செய்வேன்" - மறைந்த ஜுபின் கார்க் குறித்து மனைவி கரிமா
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க் சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவம் அவருடைய ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நீச்சல் குளத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த ஜுபின் கார்க்கின் உடல் சிங்கப்பூரிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எண்ணி அவருடைய உடலை இங்கு மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய ஜுபீன் கார்க் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அசாம் மாநில அரசும் குவஹாத்தி மருத்துவக் கல்லூரியில் உடற்கூராய்வு செய்யக் கூறியது.
இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவருடைய உடலைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
அசாம் மாநிலத்தின் அடையாளமாகத் திகழும் இவர் மக்கள் நலனுக்காகப் பல உதவிகளைச் செய்திருக்கிறார்.
அவருடைய உடல் அசாமில் அரசு மரியாதையுடன் கடந்த 23-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.
தற்போது ஜுபின் கார்க்கின் மனைவி கரிமா ANI ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "நானும் ஜுபின் கார்க்கும் இணைந்து ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருந்தோம். அது அவருடைய கடைசி படமாக இருக்கும்.
அந்தத் திரைப்படம் குறித்து மிகவும் ஆர்வமாக இருந்தார். அதனால் அப்படத்தை அக்டோபர் 31 அன்று வெளியிட வேலைகளைக் கவனித்து வந்தார்.
இப்போது, நாங்கள் அந்தப் படத்தில் வேலை செய்து, அவர் நினைத்தபடி அதை முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறோம்.
இப்போது அந்தப் படத்திற்காக நாங்கள் வேலை செய்ய வேண்டும். அவர் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதன் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானது.
இது ஒரு காதல் கதை. மக்களும் இதை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அவருடைய குரலை டப் செய்ய முடியவில்லை. எனவே படத்தில் ஒரு வெற்றிடம் இருக்கும்.
பின்னணி இசையையும் அவர் செய்ய முடியவில்லை. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அவர் திட்டமிட்டிருந்த எல்லாவற்றையும், அதற்கு மேலும் பலவற்றையும் செய்ய முயற்சிப்போம்.
அவர் விரும்பியபடி படத்தை விரைவில் முடித்து, அக்டோபர் 31 அன்று வெளியிட முயற்சிப்போம்.
அவர் செய்ய விரும்பியவற்றை நான் செய்வேன், மேலும் இளைஞர்களுடன் அவருடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன்" எனப் பேசியிருக்கிறார்.