அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்
நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதைத்தவிர, வேறு ஒன்றையும் இதுவரை செய்ததில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோதுதான் நீட் கொண்டு வரப்பட்டது. அதை சட்டமாக்க உதவியது திமுக அமைச்சர்கள்தான். நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடி வருகிறது.
பாஜக - அதிமுக கூட்டணி வலிமையாகவே உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
ஆட்சியில் பங்கு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். கடந்த காலங்களில் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக முதல்வர்கள் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான போக்கில் செயல்பட்டு வந்தனர். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற்றனர்.
மத்திய பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமைத்து சிறப்பாக மாநிலங்களை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை தவறாக வழி நடத்துவதன் காரணமாக, மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்கை மட்டுமே செய்கிறார்.
தமிழக வளர்ச்சிக்காக அவர் எதையும் செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டரீதியாக சந்திப்பேன் என்றார்.
இதையும் படிக்க | ஜகதீப் தன்கருடன் ஆர்.என். ரவி சந்திப்பு