ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ் கானால் வென்ற லக்னோ!
இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களம் கண்டன.
ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்தது.
இன்றைய போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது லக்னோ அணி.
முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி 180 ரன்கள் எடுத்து இருந்தது. இன்றைய போட்டியில் நிக்கோலஸ் பூரன் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் லக்னோ அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களை கடந்து இருக்கும்.

ஆனால் அவர் முக்கியமான அடித்து ஆட வேண்டிய ஆறாவது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.
நிக்கோலஸ் பூரன் இதுவரை சந்தீப் ஷர்மா வீசிய பந்தில் மூன்றாவது முறையாகத் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.
ஆர்ச்சர் பவர்ப்ளேயின் மூன்றாவது ஓவரில் மிட்செல் மார்ஷின் விக்கெட்டை எடுத்து லக்னோவின் ரன் குவிப்பைத் தொடக்கத்திலேயேத் தடுத்தார்.
லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் கடந்த போட்டிகளில் பொறுமையாக ஆடி வந்தாலும் பூரனின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு இன்று ஒரு கவனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சத்தத்துடன் 66 ரன்கள் எடுத்து ரன் குவிப்பிற்கு உதவினார்.
இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கும் ஆயுஷ் பதோனி கடந்த எல்லாப் போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில் இன்று ஒரு அரை சத்தத்தைக் பதிவுச் செய்தார்.
ஹசரங்கா மிக முக்கிய விக்கெட்டான ரிஷப் பந்த் மற்றும் எய்டன் மார்க்ரமின் விக்கெட்டை எடுத்து லக்னோவின் வேகமான ரன் குவிப்பிற்கு ஒரு வேகத் தடையை வைத்தார்.

சமத் ஸ்ட்ரைகில் இருந்து முதல் பந்து ஒரு ரன். இரண்டாவது, மூன்றாவது பந்துகளை சிக்ஸர்கள் அடித்தார்.
நான்காவது பந்து 2 ரன்கள் மற்றும் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துகளை சிக்சர்க்கு விளாசினார் சமத். கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் அதிரடியாக எடுத்து இருந்தனர்.
சென்ற போட்டியில் கடைசி ஓவரில் சந்தீப் ஷர்மா பந்து வீசி 19 ரன்கள் கொடுத்து இருந்தார், இன்று 27 ரன்கள் கொடுத்துள்ளார். மொத்தம் கடைசி ஓவரில் 27 ரன்கள் அடித்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து இருந்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கி இருந்தனர்.
ராஜஸ்தான் அணிக்காக இம்பேக்ட் பிளேயராக இன்று அறிமுகம் செய்யப்பட்ட 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் அசால்ட்டாக விலகி நின்று கவர்ஸ் திசையில் சிக்சர் அடித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இன்றைய போட்டியில் இவர் அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக, ஐ.பி.எல் வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி, ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ஸ்வால் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடத் தொடங்கினர்.
இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் பவர்ப்ளேவின் முடிவில் 61 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி. வைபவ் சூர்யவன்ஷியை ஸ்டம்பிங் செய்தார் ரிஷப் பண்ட்.
தன்னுடைய அறிமுக போட்டியில் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்த வைபவ் சூர்யவன்ஷி, கண் கலங்கியபடி பெவிலியனுக்கு திரும்பினார்.
இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடக்க ஆட்டக்காரராக பேட்டிங்கில் களம் இறங்கிய ஜெய்ஸ்வால் ஒன்பதாவது ஓவரில் தன்னுடைய அரை சதத்தைப் பதிவு செய்தார்.
எப்படியாவது ஜெயஸ்வால் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்தது லக்னோ அணி. 18வது ஓவரில் ஆவேஷ் கான் 131.2 கிமீ வேகத்தில் வீசிய யார்க்கர் பந்தினால் போல்ட் ஆனார்.
ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் 4 சிக்ஸர்கள், ஐந்து பௌண்டரிகள் என 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
கடைசி 18 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி 18-வது ஓவரில் இரண்டு விக்கெட்களை அடுத்தடுத்து இழந்திருந்தது.

கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவேஷ் கான் வீசிய பந்தில் கேட்ச் ஆனார் ஹெட்மயர். கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சுபம் துபே சிக்ஸ் அடிக்க பேட்டை சுழற்ற பந்து மைதானத்திற்கு உள்ளேயே விழுந்தது.
இதனால் அவர்கள் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சுபம் துபே 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இதனால் 181 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது ராஜஸ்தான்.
ராஜஸ்தான் அணியை அதனுடைய சொந்த மைதானத்தில் வைத்து தோற்கடித்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது லக்னோ அணி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs