கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!
"அதிர்ஷ்டவசமாக நான் ராஜா ரகுவன்சியாகவில்லை" - காதலனுடன் வாழ விரும்பிய மனைவி; வாழ்த்தி அனுப்பிய கணவன்
உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் என்ற இடத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் குஷ்பு என்ற பெண்ணைக் கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில நாட்கள் கணவன் வீட்டில் இருந்த குஷ்பு சம்பிராயப்படி தனது பெற்றோர் வீட்டிற்குச் சில நாட்கள் சென்றார். பெற்றோர் வீட்டிற்குச் சென்ற குஷ்புவைத் திடீரென காணவில்லை. இது தொடர்பாக சுனில் மற்றும் குஷ்பு தந்தை போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இதை தெரிந்து கொண்ட குஷ்பு தானே நேரில் போலீஸில் ஆஜரானார். அவர் தனது காதலனுடன் வாழ்வது தெரிய வந்தது. போலீஸில் வந்து தனது காதலனுடன் தான் வாழ்வேன் என்றும், தனது கணவனுடன் செல்ல மாட்டேன் என்று குஷ்பு பிடிவாதமாக தெரிவித்தார்.
சுனிலும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். குஷ்பு தனது காதலனுடன் இருப்பதை கேள்விப்பட்டதும், குஷ்பு அவரது காதலனோடு இருக்கட்டும் என்று சுனில் கூறிவிட்டார்.
இது குறித்து சுனில் கூறுகையில், ''எனது மனைவி அவரது தாயார் வீட்டிற்குச் சென்ற பிறகு நைனிடாலுக்குத் தேனிலவு செல்ல திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால் குஷ்பு அவரது காதலனுடன் செல்ல விரும்பினால் போகட்டும். எனக்கு மகிழ்ச்சிதான். அதிர்ஷ்டவசமாக நானும் ஒரு ராஜா ரகுவன்சியாக மாறவில்லை. உயிர் தப்பினேன்.
இப்போது மூன்று பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனது வாழ்க்கை காப்பாற்றப்பட்டு இருக்கிறது'' என்றார்.
போலீஸ் நிலையத்தில் இருவரது குடும்பமும் பேசி ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் பிரிவது என்று முடிவு செய்யப்பட்டது. பெண் வீட்டிற்கு சுனில் குடும்பத்தினர் கொடுத்த பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.
அனைத்தையும் இரு தரப்பினரிடம் போலீஸார் எழுதி வாங்கிக்கொண்டனர். குஷ்பு தனது காதலனுடன் புறப்பட்டு சென்றார்.
சுனில் மனைவி வீட்டில் கொடுத்த பொருட்களுடன் வீடு திரும்பினார். போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த குஷ்புவிடம், என்னைக் கொலை செய்ய முயற்சி செய்யாமல் இருந்ததற்கு நன்றி என்றும், மகிழ்ச்சியாக இருக்கும்படியும் சுனில் வாழ்த்திவிட்டு சென்றார்.