பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!
கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!
பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டிருந்தது.
மேலும் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலா்கள் இனி அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டு, 12 வாரங்கள் கெடு முடிவடைந்த போதிலும், பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன.
இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் எனவும், எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 18) விசாரணைக்கு வந்த நிலையில், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வரும் ஜூலை 2 ஆம் தேதிக்குள் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புதிதாக நடப்படும் கொடிக் கம்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1000 கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும் பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டத்திற்கு வாடகை வசூல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி