குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் குரோஷியாவின் பாரம்பரிய அரசு முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக்கிற்கு நினைவுப் பரிசை மோடி வழங்கி, அதன் சிறப்பை விவரித்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அரசு விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
குரோஷியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் குரோஷியாவின் வளர்ச்சியில் பங்கெடுப்பதுடன், இந்தியாவில் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பிலேயே உள்ளனர். தலைநகர் சாகிரேப் விமான நிலையத்தில் மறக்க முடியாத வரவேற்பை அளித்த அவர்களுடன் கலந்துரையாடினேன். இந்திய வம்சாவளியினர் இடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம் இந்தியா - குரோஷியா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.