ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது.
பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெடிகுண்டு பொறுத்தப்பட்டுள்ளதாக, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் இன்று (ஜூன் 18) மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, விமான நிலையத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஹைதராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அந்த விமான நிலையத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில் இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காண போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2008-ம் ஆண்டு முதல் பேகம்பேட் விமான நிலையம் தனியார் விமானங்கள் இயக்கவும், ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இத்துடன், சில நாள்களுக்கு முன்பு ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம்: இன்றுமுதல் விற்பனை தொடக்கம்!