செய்திகள் :

``அந்த ஷோவுல அவர் ஸ்கிரிப்ட் எல்லாருக்கும் பிடிச்சது...'' - எம்.ஜி.கன்னியப்பன் குறித்து கதிர்பாரதி

post image

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பல முகங்களைக் கொண்ட எம்.ஜி.கன்னியப்பன் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நா.முத்துக்குமார், குகை.மா.புகழேந்தி ஆகியோரின் சம காலத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.கன்னியப்பன். சொந்த ஊர் சேலம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னைக்கு வந்தவர், சினிமா முயற்சிக்கே முழுநேரத்தைச் செலவிட முடியாத சூழலில் பதிப்பங்கள், பத்திரிகைகளில் சில காலம்  பணி புரிந்தார். கதை, கவிதை எனத் தொடர்ந்து இயங்கி வந்த இவருடைய படைப்புகள் முன்னணி வார இதழ்களில் வெளிவந்துள்ளன. ஆனந்த விகடனிலும் இவரது பல கதைகள் வெளிவந்துள்ளன.

எம்.ஜி.கன்னியப்பன்

ஜீ தமிழ் சேனலில் சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய 'மகாநடிகை' ஷோவில் கடந்த வாரம்தான் இவருடைய ஸ்க்ரிப்ட் ஒளிபரப்பானது. இந்தச் சூழலில் கன்னியப்பனின் நண்பர் கதிர்பாரதியிடம் பேசினோம்.

''பாக்கெட் நாவல் காலத்துல எழுத வந்தவர். இவருடைய படைப்புகள்ல ஹியுமருக்கு முக்கியத்துவம் இருக்கும். நகரத்துல சின்னவொரு வீட்டுல வசிக்கிற கூட்டுக் குடும்பத்துல புதுசா கல்யாணம் செய்துகிட்ட ஒரு ஜோடி எப்படி தங்களுடைய இனிமையான நிமிடங்களைக் கழிப்பார்கள் என்பதை கவிதையா ஒரு வார இதழ்ல எழுதியிருந்தார். என்னைக் கேட்டா அந்த எழுத்து தான் இவருடைய அடையாளம். அதேபோல 'வெடி வாங்கி வந்தீயளா'ங்கிற இவருடைய ஈழம் குறித்த படைப்பும் ரொம்பவே கவனிக்கப் பட்டதுனு சொல்லலாம்.

சினிமாவுல பாடலாசிரியர், அசோசியேட் இயக்குநர் வரைக்கும் ஒர்க் பண்ணிட்டார். இவருடைய சில பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிருக்கு. மகனையும் இப்ப சினிமாவுக்கு கொண்டு வந்துட்டாரு. இவருடைய மகன் இப்போ கேமரா மேன்.

கதிர்பாரதி

எழுத்தைத் தாண்டி பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். தன்னுடைய வாழ்க்கையில் என்னவொரு விஷயம்னாலும் முதல்ல நட்பு வட்டத்துல சொல்லிடுவார்.. குறிப்பா ஒரு விஷயம் என்னன்னா எதிர்மறையான வார்த்தைகளே இவர்கிட்ட இருந்து வராது. சினிமாவுல பெரிய கனவை வச்சிருந்தார். இவ்வளவு  சீக்கிரத்துல  கிளம்பட்டாரேங்கிறதுதான் ரொம்பவே வேதனையா இருக்கு.

ஜீ தமிழ் சேனல்ல ஒரு எழுத்தாளரா இவரை சிபாரிசு செய்தேன். இவருடைய எழுத்து அங்க எல்லாருக்கும் பிடிச்சிப் போச்சு. போன வாரம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் பேசினார். தன்னுடைய படைப்பு லட்சக்கணக்கான மக்கள் முன் வெளியாவதைப் பார்க்கிற சந்தோஷம் ஒரு படைப்பாளிக்குப் பெரிய மகிழ்ச்சி. அந்த சந்தோஷம் போதும்னு போயிட்டார்னு நினைக்கிறேன்'' என்கிறார் கதிர்பாரதி.

கன்னியப்பனின் உடல் சொந்த ஊரான சேலத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.