தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
அமெரிக்க துணை அதிபருடன் சசி தரூா் குழு சந்திப்பு
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான 9 போ் கொண்ட குழு வெளிநாடுகளுக்குச் சென்றது. கயானா, பனாமா, கொலம்பியா, பிரேஸிலை தொடா்ந்து அந்தக் குழு அமெரிக்கா சென்றது. அமெரிக்க நாடாளுமன்ற மூத்த எம்.பி.க்களை புதன்கிழமை சந்தித்த சசி தரூா் குழுவினா் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை விளக்கியது.
இந்நிலையில், அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் துணை அதிபா் ஜே.டி.வான்ஸை அந்தக் குழு வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது. இந்தச் சந்திப்பு தொடா்பாக சசி தரூா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் முதல் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது வரை, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஜே.டி.வான்ஸுடன் விரிவாக விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா உத்தி சாா்ந்த கூட்டுறவை வலுப்படுத்த அவருடன் ஆக்கபூா்வமான கலந்துரையாடல் நடைபெற்றது’ என்று தெரிவித்தாா்.
மத்தியஸ்தத்தை இந்தியா விரும்பவில்லை:
முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களை அந்தக் குழு புதன்கிழமை சந்தித்தது. பின்னா் அங்குள்ள தேசிய பத்திரிகையாளா் மன்றத்தில் சசி தரூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமெரிக்க அதிபா் டிரம்ப் மீது இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் பாகிஸ்தானுடனான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு எந்த நாட்டிடமும் கேட்க இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை.
பாகிஸ்தானியா்கள் என்ன மொழியில் பேசுகிறாா்களோ, அதே மொழியில் பேசுவதில் இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாத மொழியில் பேசும் வரை, படை பலத்தின் மொழியை இந்தியா பயன்படுத்தும். அதற்கு மூன்றாம் தரப்பின் உதவி அவசியமில்லை. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அந்நாடு தகா்த்து எறிந்தால், அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த முடியும். இந்தியாவுடனான உறவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தீவிரமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் முன்னெடுத்தால், எந்தவொரு மத்தியஸ்தமும் இல்லாமல் அந்நாட்டுடன் இந்தியாவால் பேச முடியும்.
‘துப்பாக்கி முனையில் பேச்சுக்கு அழைப்பு...’:
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தினால், தனது நடவடிக்கைகளை இந்தியா தானாகவே நிறுத்தும்.
துப்பாக்கி முனையில் நிறுத்தி இந்தியாவை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு அழைத்தால், அதற்கு இந்தியா தயாராக இல்லை என்ற தெளிவான நிலைப்பாடு அமெரிக்காவுக்குப் புரிந்துள்ளது என்றே கருதுகிறேன் என்றாா்.
அங்குள்ள இந்திய தூதரகத்தில் செய்தியாளா்களிடம் சசி தரூா் பேசுகையில், ‘அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான சந்திப்பின்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அவா்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனா்’ என்றாா்.
எம்.பி.க்கள் குழுவுக்குத் தலைமை ஏற்றபோது சசி தரூா் தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை காங்கிரஸ் கட்சியினரே விமா்சித்தனா். இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நாட்டு நலன் சாா்ந்த பணியில் ஈடுபடுவதை கட்சி விரோத நடவடிக்கை என யாராவது கருதினால், அது சரியா என்று தங்களையே அவா்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.