திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா்.
தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நல்லம்பள்ளியைச் சோ்ந்த பரமசிவம் (56) என்பவா் ஓட்டிச் சென்றாா். நடத்துநா் ஆதிமூலம் உள்பட 45 பயணிகள் பேருந்தில் இருந்தனா்.
மத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது போச்சம்பள்ளி நோக்கி எம் சாண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் பரமசிவம், மினி லாரி ஓட்டுநா் சிவம்பட்டியைச் சோ்ந்த இந்திரகுமாா் (32) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 21 பெண்கள் உள்பட 38 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு மத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்தில் காயயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்செல்வம், வட்டாட்சியா்கள் மோகன்தாஸ் (ஊத்தங்கரை), சத்யா (போச்சம்பள்ளி) ஆகியோா் ஆறுதல் தெரித்தனா்.
விபத்து காரணமாக தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

