'புதிதாக வருபவர்களுடன் போட்டிபோடும் இடத்தில் இருக்கிறார் வெற்றிமாறன்..!' - நெக...
அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்
விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று(சனிக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி, பிற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக தாக்கல் செய்த ஒரு வேளாண் பட்ஜெட்டைப்போன்று, இந்த ஆண்டும் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாக கூறினார். விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
"தமிழக விவசாயிகளின் நலனைக் காப்பதற்காக ஆண்டுதோறும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறோம் என்ற பெயரில், வேளாண்துறை சார்ந்த ஊரக வளர்ச்சித்துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை வளர்ச்சித்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, தொழில்துறை, நீர்வளத்துறை என பல துறைகளை ஒன்றாக இணைத்து ஒரு அவியல் கூட்டுபோல வேளாண் பட்ஜெட் என வேளாண்துறை அமைச்சர் இந்த வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!
பருவமழையின்போது பொழியும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்து திட்டத்தை தொடங்கியது, ஆனால் அந்தத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு எவ்வித நிதியையும் இந்த வேளாண் பட்ஜெட்டில் திமுக அரசு ஒதுக்கவில்லை. இதுபோல் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், இருந்த பயிர் சாகுபடி பரப்பளவைவிட தற்போதைய திமுக ஆட்சியில் அனைத்து விதமான பயிர் சாகுபடிகளும் குறைந்துவிட்டது.
திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது. குறைந்து வரும் சாகுபடி பரப்பை உயர்த்த திமுக ஆட்சியில் எந்தவித திட்டத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்ல.
குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை பயிர் காப்பீடு திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு சேர்க்கவில்லை, ஒவ்வொரு பருவமழையின்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
இதையும் படிக்க | வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!
மேலும், அதிமுக ஆட்சியில் அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய திமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் சிப்ட் முறையில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் அறிவிப்புகளாவது வருமா என்று ஒரு விவசாயியாக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும்பொழுது அங்கு நெல் மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்த அவர், ஒவ்வொரு நெல் மூட்டைகளுக்கும் 40 ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் குறித்து விளக்கம் அளித்த அவர், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையை கட்டுப்படுத்துவதற்காக நிதி மேலாண்மை குழு அமைத்ததாகவும், அந்த குழு இதுபோன்ற ஆலோசனைகளை ஆளும் திமுக அரசுக்கு வழங்கியது, அந்த குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதா, இது போன்ற திட்டங்களை அந்த குழு அரசுக்கு ஆலோசனைகளாக அளித்தது என்பது குறித்து ஒரு விவரத்தைக்கூட ஆளும் ஸ்டாலின் அரசு தெரிவிக்கவில்லை, இது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை ஸ்டாலின் அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியா கூட்டணி, இந்தியா கூட்டணி என மூச்சுக்கு 300 முறை சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டுக்கு என்ன பலனை பெற்றுத் தந்தார் என்று கேள்வி எழுப்பிய அவர், பலன் கிடைக்கும் வகையில் என்ன நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சி வரலாற்றில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ததாக இதுவரை எவ்வித வரலாறும் கிடையாது எனவும் குற்றம் சாட்டினார்.
ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றுவதற்காகவே திமுக அரசு வேளாண் பட்ஜெட் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாகவும், இது விவசாயிகளை ஏமாற்றுவதற்கான ஒரு கண்துடைப்பு நாடகமே என்றும், மக்களை ஏமாற்றும் ஒரு தந்திர மாடல்தான் திமுகவின் இந்த வேளாண் பட்ஜெட் என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க |'அவரைக் கேளுங்க சார்!' - இபிஎஸ் vs செங்கோட்டையன்! அதிமுகவில் என்ன நடக்கிறது?