Test Twenty என்பது என்ன? - கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!
ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்?" - அண்ணாமலை கேள்வி
`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டு வருவோம்' என்ற வாக்குறுதியோடு 2021 மே மாதம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், சமீபத்தில் நெல்லை கவின் ஆணவக்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியபோதும் தனிச் சட்டம் விஷயத்தில் அமைதி காத்து, கடந்து சென்றார்.
தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, ``நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது'' என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலினிடம் ஆளும் கூட்டணி கட்சிகளான வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியபோதும் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறிருக்க, அடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ``ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்" என்று சட்டமன்றத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த நிலையில், கண்துடைப்புக்காக ஸ்டாலின் ஆணையம் அமைத்திருப்பதாக விமர்சித்திருக்கும் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, ``நான்கரை ஆண்டுகளாக தி.மு.க அமைத்த எண்ணற்ற குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, ``தமிழகத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021-ம் ஆண்டிலிருந்து, 2023-ம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது தி.மு.க அரசு.

இந்த நிலையில், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?
இது தவிர, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தி.மு.க அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் தி.மு.க அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.