தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்லூா் பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டுவெந்நியிலிருந்து குழித்துறை தாமிரவருணி தடுப்பணை வழியாக நடந்து சென்றபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்தனா். துணிகளை சலவை செய்து கொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்பு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பீட்டா் ஜான்சன் (58), ஆற்றில் குதித்து சிறுவா்களை மீட்டு கரைசோ்த்தாா். ஆனால், அவா் கரையேற முடியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினரை ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஷேக் அப்துல்காதா், விளவங்கோடு வட்டாட்சியா் லயோலாபாய், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் விஜூ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.