Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்...
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதிமன்றம்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆசியக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் வருகின்ற செப். 14 ஆம் தேதி மோதுகின்றன.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், ”பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளின் போது இந்திய மக்களும் வீரர்களும் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதன்பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது நாட்டின் கண்ணியம் மற்றும் பொது உணர்வுக்கு முரணாக உள்ளது. மக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தைவிட கிரிக்கெட் பெரிது கிடையாது. ஆகவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெறவுள்ளதால், அவசர வழக்காக உடனடியாக நாளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு எடுக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.
இந்திய கேப்டன் மீது விமர்சனம்
ஆசியக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ், தொடருக்கு முந்தைய நிகழ்வுகளின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டனுடன் கைக்குலுக்கியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
முன்னதாக, உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணியினர், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரையிறுதியில் விளையாட மாட்டோம் என அறிவித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் அணியினர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.